துளிகள்


துளிகள்
x
தினத்தந்தி 19 Jan 2018 8:30 PM GMT (Updated: 19 Jan 2018 8:12 PM GMT)

இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.860 கோடி வரை வருமான வரி பாக்கி வைத்திருப்பதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு வருமான வரித்துறை பதில் அளித்துள்ளது.

* இந்திய கிரிக்கெட் வாரியம் ரூ.860 கோடி வரை வருமான வரி பாக்கி வைத்திருப்பதாக, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்கு வருமான வரித்துறை பதில் அளித்துள்ளது.

* ‘இந்திய அணி வேகப்பந்து வீச்சில் நல்ல முன்னேற்றம் கண்டு வருகிறது. ஆனால் வேகப்பந்து வீச்சின் தேசம் என்று இந்திய அணியை அழைப்பதற்கு இன்னும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டும்’ என்று பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் சோயிப் அக்தர் கூறியுள்ளார்.

* தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரர் டுமினி, உள்ளூரில் நடந்த போட்டி ஒன்றில் ஒரே ஓவரில் 37 ரன்கள் விளாசி சாதனை படைத்தார். மோமென்டம் ஒரு தின கோப்பைக்கான போட்டியில், நைட்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் கேப்கோப்ராஸ் அணிக்காக களம் இறங்கிய டுமினி, எட்டி லீயி என்ற சுழற்பந்து வீச்சாளரின் ஒரே ஓவரை அடித்து நொறுக்கினார். முதல் 4 பந்துகளை வரிசையாக சிக்சருக்கு பறக்கவிட்ட அவர் 5-வது பந்தில் 2 ரன் எடுத்தார். ஆனால் கடைசி பந்தை எட்டி லீயி நோ-பாலாக வீச அந்த பந்தை பவுண்டரிக்கு அனுப்பினார். அத்துடன் எக்ஸ்டிரா வகையிலும் ஒரு ரன் கிடைத்தது. இதன் பிறகு மீண்டும் வீசப்பட்ட கடைசி பந்து சிக்சருக்கு ஓடியது. ‘லிஸ்ட் ஏ’ வகையிலான கிரிக்கெட்டில் ஒரு ஓவரில் எடுக்கப்பட்ட 2-வது அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். ஏற்கனவே 2013-ம் ஆண்டு டாக்கா பிரிமீயர் லீக்கில் ஜிம்பாப்வேயின் சிகும்புரா, வங்காளதேசத்தின் அலாவுதின் பாபு வீசிய ஒரு ஓவரில் 39 ரன்கள் திரட்டியதே சாதனையாக தொடருகிறது.

* சர்வதேச தடகள சம்மேளனம் சார்பில், ஹார்மோன் சுரப்பு அடிப்படையில் கடைபிடிப்படும் பாலின கொள்கை முறைக்கு மேலும் 6 மாதங்கள் தடைவிதித்து விளையாட்டுக்கான தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பாலின சர்ச்சைக்குள்ளான இந்திய வீராங்கனை டுட்டீ சந்த், காமன்வெல்த் விளையாட்டில் பங்கேற்பதில் உள்ள சிக்கல் விலகியுள்ளது.

* வெலிங்டனில் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான 5-வது மற்றும் கடைசி ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணி 15 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் முதலில் பேட் செய்த நியூசிலாந்து 7 விக்கெட்டுக்கு 271 ரன்கள் எடுத்தது. மார்ட்டின் கப்தில் சதம் (100 ரன்) அடித்தார். அடுத்து களம் கண்ட பாகிஸ்தான் 49 ஓவர்களில் 256 ரன்னில் ‘ஆல்-அவுட்’ ஆனது. இந்த வெற்றியின் மூலம் 5 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் தொடரை நியூசிலாந்து அணி 5-0 என்ற கணக்கில் முழுமையாக கைப்பற்றியது.

Next Story