வெள்ளகோவில் அருகே, வாலிபரை காரில் கடத்திய வழக்கில் 5 பேர் கைது - 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்

வெள்ளகோவில் அருகே வாலிபரை காரில் கடத்திய வழக்கில் 5 பேர் கைது செய்யப்பட்டனர். 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள் இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

Update: 2020-07-24 06:15 GMT
வெள்ளகோவில், 

வெள்ளகோவில் முத்தூர்ரோட்டை சேர்ந்தவர் ஹிட்டேஸ்சாவெண்டிலால்குரியா (வயது44). இவர் வெள்ளகோவில் அருகே உள்ள செங்காளிபாளையத்தில் பஞ்சு வியாபாரம் செய்து வந்தார். கடந்த 2014-ம் ஆண்டு கரூரை சேர்ந்த கண்ணன் என்பவர் கணக்காளராக வேலை செய்து வந்தார். அப்போது கண்ணன் தான் சொந்தமாக தொழில் செய்வதாக கூறி வேலையை விட்டு நின்று விட்டார்.

அப்போது ஹிட்டேஸ்சாவெண்டிலால்குரியாவிடம், கண்ணன் தான் செய்யும் தொழில் சம்பந்தமாக வரவு செலவு செய்து கொண்டதாகவும் அதன் பின்னர் கடந்த 21-தேதி காலை தனது உறவினர் மகன் அபிஷேக்கிடம் (24) கோவைக்கு லோடு ஏற்றி விடு என்று ஹிட்டேஸ்சாவெண்டிலால் குரியா கூறியுள்ளார்.

அதன்படி அபிஷேக் லோடு ஏற்றி விட்டு சிவநாதபுரம் சேரன் நகர் பிரிவு அருகே மோட்டார்சைக்கிளில் சென்ற போது 2 பேர்வழிமறித்து அபிஷேக்கிடம் போன் கொடு பேசி விட்டு தருகின்றோம் என கூறி போனை வாங்கி உள்ளனர். அப்போது அந்த வழியாக வந்த காரில் அபிஷேக்கை வலுக்கட்டாயமாக தூக்கிப்போட்டு கடத்தி செல்லும் போது காரில் 7 பேர் இருந்ததாகவும், அப்போது காரில் இருந்த ஒருவர் உங்க அப்பாவை வரச்சொல்லவும்,எனது அப்பா குஜராத்தில் உள்ளார் என அபிஷேக் கூறியுள்ளார். அப்போது தான் ஆள் மாறி கடத்தி விட்டதாக தெரியவந்தது.

உடனே காருக்கு பின்னால் ஒருவர் அபிஷக் மோட்டார்சைக்கிளை ஓட்டி வந்துள்ளார். உடனே அபிஷேக்கை வெள்ளகோவில் அருகே உள்ள தாசவநாயக்கன்பட்டி அருகே இறக்கிவிட்டு மோட்டார்சைக்கிள், செல்போன் ஆகியவற்றை கொடுத்து விட்டு சென்றுவிட்டனர்.

இது குறித்து ஹிட்டேஸ்சாவெண்டிலால்குரியாவிடம் அபிஷேக் கூறியுள்ளார். அதன் பேரில் அவர் வெள்ளகோவில் போலீசில் புகார் கொடுத்துள்ளார் புகாரின் வெள்ளகோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல் உத்தரவின் பேரில், திருப்பூர் கூடுதல் சூப்பிரண்டுவேல் முருகன், மேற்பார்வையில்,காங்கேயம் துணை போலீஸ் சூப்பிரண்டு தனராசு தலைமையில் வெள்ளகோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் மனோகர்அடங்கிய தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.

இந்நிலையில் போலீசாருக்கு கிடைத்த தகவலின்பேரில் இந்த கடத்தல் வழக்கில் சம்பந்தபட்ட சேலத்தை சேர்ந்த சதீசையும் (30), சேலம் கிச்சாபாளையத்தை சோந்த சபரிநாதன் (36), சேலம் அம்மாபேட்டையை சேர்ந்த சந்தோஷ் (29), ராகுல் (29), கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியை சேர்ந்த சந்திரசேகரன் (33) ஆகிய 5 பேரை கைது செய்து கடத்தலுக்கு பயன்படுத்திய காரை பறிமுதல் செய்துள்ளனர்.

கைதான 5 பேரையும் திருப்பூர் நீதித்துறை நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தினர். இவர்கள் 5 பேரையும் நீதிபதி பிரவீன்குமார் திருப்பூர் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். இந்த வழக்கில் சம்பந்தப்பட்டமேலும் 2 பேரை போலீசார் தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்