அனுமதியின்றி மீன் விற்ற 10 கடைகள் அகற்றம்


அனுமதியின்றி மீன் விற்ற 10 கடைகள் அகற்றம்
x

அரியாங்குப்பம் மாதாகோவில் வீதியில் அனுமதியின்றி மீன் விற்பனை செய்த 10 கடைகளை கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் அகற்றினர்.

அரியாங்குப்பம்

அனுமதியின்றி மீன் விற்பனை

அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்துக்குட்பட்ட மாதா கோவில் வீதியில் அனுமதி இல்லாமலும், போக்குவரத்துக்கு இடையூறாகவும், மக்களுக்கு சுகாதார சீர்கேடு ஏற்படும் வகையிலும் சிலர் தற்காலிகமாக மீன் கடைகள் வைத்து வியாபாரம் செய்து வந்தனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர். இங்கு மீன் விற்பனை செய்யப்படுவதால் அரியாங்குப்பம் அங்காடியில் மீன் விற்பனை பாதிக்கப் படுவதாக அங்குள்ள பெண்கள் புகார் கூறினர்.

கடைகள் அகற்றம்

இதைத்தொடர்ந்து இன்று அரியாங்குப்பம் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ரமேஷ் தலைமையில், வருவாய் ஆய்வாளர்கள் பாலமுருகன், புனிதவதி, பில் கலெக்டர் செழியன் ஊழியர்கள் மாதாகோவில் வீதிக்கு சென்றனர். பின்னர் அங்கு மீன் விற்பனை செய்த 10-க்கும் மேற்பட்ட கடைகளை அகற்றினர். தொடர்ந்து தடையை மீறி மீன்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதற்கிடையே மார்க்கெட் பகுதியில் நடைபாதையில் இருந்த மீன் விற்பனை கடைகளையும் அகற்றினர். அசம்பாவித சம்பவம் நடக்காமல் தடுக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story