நாடாளுமன்ற தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது - பலத்த பாதுகாப்பு ஏற்பாடு


நாடாளுமன்ற தேர்தலில் 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடக்கிறது - பலத்த பாதுகாப்பு ஏற்பாடு
x

Image Courtacy: ANI

13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு நடக்கிறது.

புதுடெல்லி,

இந்திய நாடாளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடந்து வருகிறது. இதில் முதற்கட்டமாக தமிழகத்தின் 39 தொகுதிகள் உள்பட 102 தொகுதிகளில் கடந்த 19-ந்தேதி வாக்குப்பதிவு நடந்தது. 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் நடந்த இந்த தேர்தலில் 65.5 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன.

இந்நிலையில் 13 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 88 தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடக்கிறது.

அந்தவகையில் கேரளா (20 தொகுதிகள்), கர்நாடகா (14), ராஜஸ்தான் (13), மராட்டியம் (8), உத்தரபிரதேசம் (8), மத்திய பிரதேசம் (6), அசாம் (5), பீகார் (5), சத்தீஷ்கார் (3), மேற்கு வங்காளம் (3), மணிப்பூர் (1), திரிபுரா (1), காஷ்மீர் (1) போன்ற மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் தேர்தல் நடக்கிறது.

2-ம் கட்ட தேர்தலில் 89 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. ஆனால் மத்திய பிரதேசத்தின் பீட்டுல் தொகுதி பகுஜன் சமாஜ் வேட்பாளர் மரணமடைந்ததால், அந்த தொகுதிக்கான தேர்தல் ஒத்திவைக்கப்பட்டு உள்ளது. எனவே மீதமுள்ள 88 தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடக்கிறது.

இந்த தொகுதிகளில் நேற்று முன்தினம் மாலையிலேயே பிரசாரம் ஓய்ந்த நிலையில் வாக்குப்பதிவுக்கான ஏற்பாடுகளை தேர்தல் கமிஷன் தீவிரமாக மேற்கொண்டு வந்தது. இந்த நடவடிக்கைகள் நிறைவடைந்து வாக்குப்பதிவுக்கு தயார் நிலையில் உள்ளது.

2-ம் கட்ட தேர்தலில் வாக்களிக்க தகுதி வாய்ந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 15.88 கோடியாகும். இவர்கள் வாக்களிப்பதற்காக 1.67 லட்சம் வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த வாக்குச்சாவடிகளில் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. வாக்குப்பதிவு நிறைவடைந்ததும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு வாக்கு எண்ணும் மையங்களுக்கு எடுத்துச்செல்லப்படுகின்றன.

இந்த தேர்தலுக்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. குறிப்பாக அந்தந்த மாநில போலீசாருடன் மத்திய பாதுகாப்பு படையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பு ஏற்பாடுகளை செய்துள்ளனர்.


Next Story