"ராகுல் காந்தியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்" - பா.ஜ.க. எம்.பி. பிரக்யா தாக்கூர் கடும் விமர்சனம்


ராகுல் காந்தியை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் - பா.ஜ.க. எம்.பி. பிரக்யா தாக்கூர் கடும் விமர்சனம்
x

ராகுல் காந்திக்கு அரசியல் வாய்ப்பளிக்காமல், அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் என்றும் பிரக்யா தாக்கூர் எம்.பி. கூறியுள்ளார்.

புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, லண்டனில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பேசிய போது, நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேசும்போது 'மைக்' அணைக்கப்படுகிறது என்று குற்றம் சாட்டினார். ராகுல் காந்தியின் கருத்துக்கு பா.ஜ.க.வினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில், ராகுல் காந்தியின் பேச்சை பா.ஜ.க. எம்.பி. பிரக்யா தாக்கூர் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது;-

"வெளிநாட்டு பெண்ணுக்கு பிறந்த ஒருவரால் தேச பக்தராக இருக்க முடியாது என்று சாணக்யர் கூறியுள்ளார். அது உண்மை என்பதை ராகுல் காந்தி தற்போது நிரூபித்துள்ளார்.

நாடாளுமன்றம் சீராக நடைபெற்றால், பல பணிகளை நம்மால் செய்ய முடியும். காங்கிரஸ் கட்சி தற்போது அழிவின் எல்லையில் இருக்கிறது. அவர்களது சிந்தனைகளும் தற்போது சிதைக்கப்பட்டு விட்டது.

இந்த நாட்டில் உள்ள மக்களால் தேர்தலில் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவராக இருக்கும் ராகுல் காந்தி, தற்போது அந்த மக்களை அவமதிக்கிறார். நாடாளுமன்றத்தில் பேச வாய்ப்பு தரப்படவில்லை என்று கூறுவது வெட்கக்கேடானது. ராகுல் காந்திக்கு அரசியல் வாய்ப்பளிக்காமல், அவரை நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும்."

இவ்வாறு பிரக்யா தாக்கூர் எம்.பி. தெரிவித்துள்ளார்.


Next Story