சென்னையில் 'இஸ்கான்' சார்பில் ஜெகநாதர் ரதயாத்திரை


சென்னையில் இஸ்கான் சார்பில் ஜெகநாதர் ரதயாத்திரை
x

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கம் (இஸ்கான்) சார்பில் 40-வது ஜெகநாதர் ரதயாத்திரை, சென்னை பாலவாக்கத்தில் நேற்று நடந்தது.

சென்னை

இஸ்கான் அமைப்பின் தென்னிந்திய தலைவர் பானு சுவாமி மகாராஜ் கலந்துகொண்டு ரத யாத்திரையை தொடங்கி வைத்தார். இதில் தொழில் அதிபர் சுரேஷ் சாங்கி, ஐ.டி.சி. திட்டப்பிரிவு ஆலோசகர் சுனில் நாயர் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றனர்.

அலங்கரிக்கப்பட்ட ரதத்தில் ஜெகநாதர், பலராமன், சுபத்ரா ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். தொடர்ந்து தீபாராதனைகள் காட்டப்பட்டு, மங்கல இசை ஒலிக்க 'கோவிந்தா... கோவிந்தா...' கோஷத்துடன் பக்தர்கள் ஒன்றுகூடி தேரை வடம்பிடித்து இழுத்தனர். ஏராளமான பெண்கள், குழந்தைகளும் கீர்த்தனைகளை பாடி, பரவசத்துடன் ரத யாத்திரையில் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் பாலவாக்கம் பகுதியில் புறப்பட்ட ரதமானது நீலாங்கரை, வெட்டுவாங்கேணி, ஈஞ்சம்பாக்கம் வழியாக அக்கரையில் உள்ள கோவிலை சென்றடைந்தது. அங்கு பஜனை, கீர்த்தனை போன்றவை நடைபெற்றன. தொடர்ந்து பிரசாதம் வழங்கப்பட்டது.

ரத யாத்திரை குறித்து இஸ்கான் அமைப்பினர் கூறும்போது, "பகவான் கிருஷ்ணரை நாம் தேடிச் சென்று வழிபடும் நிலையில், பகவானே நம்மைத் தேடி வருவதற்கான நிகழ்வுதான் ரத யாத்திரை. இதில் பகவான் ஜெகநாதரை நேரில் தரிசிப்பவர்களுக்கு மறுபிறவி இல்லை'' என்றனர்.


Next Story