நந்திவரம் அரசு பள்ளி எதிரே குப்பைகளை கொட்டும் நகராட்சி நிர்வாகம்; கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


நந்திவரம் அரசு பள்ளி எதிரே குப்பைகளை கொட்டும் நகராட்சி நிர்வாகம்; கலெக்டர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
x

நந்திவரம் அரசு பள்ளி எதிரே நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டுகிறது. இதுகுறித்து கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

செங்கல்பட்டு

திடக்கழிவு மையம்

செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சியில் மொத்தம் 30 வார்டுகள் உள்ளன. இந்த 30 வார்டுகளில் இருந்தும் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகள் தரம் பிரிப்பதற்காக கூடுவாஞ்சேரி ரெயில் நிலையம் அருகே திடக்கழிவு மையம் உள்ளது.

அந்த மையத்தில் குப்பைகளை கொட்டி தரம் பிரிப்பதற்கு அந்த பகுதி மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்த காரணத்தினால் அந்த இடத்தில் நகராட்சி நிர்வாகம் குப்பைகளை கொட்டுவது இல்லை.

பள்ளி எதிரே குப்பைகள்

அதற்கு பதில் நந்திவரம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளி எதிரே நந்திவரம் கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் உள்ள காலி இடத்தில் டன் கணக்கில் குப்பைகள் கொட்டப்படுகிறது. இந்த குப்பை கழிவுகளை பன்றிகள், மாடுகள் கூட்டம் கூட்டமாக வந்து சாப்பிடுகிறது.

இது மட்டுமின்றி இந்த குப்பைகளில் இருந்து அதிக அளவு துர்நாற்றம் வீசுவதால் பள்ளியில் படிக்கும் மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கால்நடை ஆஸ்பத்திரியில் பணிபுரியும் டாக்டர், ஊழியர்கள் ஆகியோருக்கு நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.

மேலும் துர்நாற்றத்தோடு தினந்தோறும் மாணவர்கள் வகுப்பறையில் அமர்ந்து படிக்கும் அவல நிலையும் உள்ளது. இதேபோல் கால்நடைகளுக்கு டாக்டர், ஊழியர்கள் துர்நாற்றத்தோடு சிகிச்சை அளித்து வருகின்றனர்.

கோரிக்கை

இது குறித்து பொதுமக்கள் கூறுகையில்:-

நந்திவரம் கால்நடை ஆஸ்பத்திரி வளாகத்தில் குப்பை கொட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், கால்நடை டாக்டர் ஆகியோர் பலமுறை நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தும் அலட்சியத்தோடு மாணவர்களுக்கு நோய் தொற்று ஏற்படும் என்பது கூட இல்லாமல் தினந்தோறும் குப்பையை கொட்டி வருகிறது. எனவே செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் நேரில் வந்து ஆய்வு செய்து நகராட்சி நிர்வாகம் குப்பை கொட்டாமல் நடவடிக்கை எடுக்கும்படி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Next Story