சீர்காழியில், ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?


சீர்காழியில், ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா?
x

அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடப்பதால் சீர்காழியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மயிலாடுதுறை

சீர்காழி:

அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடப்பதால் சீர்காழியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்கப்படுமா? என வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.

ரெயில்வே கேட்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி பணங்காட்டங்குடி சாலையில் ரெயில்வே கேட் உள்ளது. இந்த ரெயில்வே கேட்டை கடந்துதான் கோவில்பத்து, பணமங்கலம், அகனி, தென்னங்குடி, வள்ளுவக்குடி, நிம்மேலி, மருதங்குடி, புங்கனூர், ஆதமங்கலம், பெருமங்கலம், கொண்டல், அகர எலத்தூர், பணங்காட்டங்குடி செல்ல முடியும்.மேலும் சீர்காழி நகர் பகுதியில் இருந்து புறவழிச்சாலை வழியாக சிதம்பரம், மயிலாடுதுறை உள்ளிட்ட ஊர்களுக்கு செல்ல வேண்டுமானால் இந்த ரெயில்வே கேட்டை கடந்து தான் செல்ல வேண்டும்.

30 நிமிடத்திற்கு ஒருமுறை ரெயில்கள் வந்து செல்கின்றன

இந்த நிலையில் இந்த ரெயில்வே கேட் வழியாக ஒரு நாளைக்கு சுமார் 40-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் மற்றும் பயணிகள் ரெயில், சரக்கு ரெயில்கள் வந்து செல்கிறது. இதனால் 40-க்கும் மேற்பட்ட முறை ரெயில்வே கேட் மூடப்படுகிறது. 30 நிமிடத்திற்கு ஒருமுறை ரெயில்கள் வந்து செல்கின்றன.

இதன் காரணமாக சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்துக்கிடக்கின்றன. அடிக்கடி ரெயில்வே கேட் மூடப்படுவதால் 108 ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட அவசர கால வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது.

போக்குவரத்து நெரிசல்

ஒவ்வொரு முறையும் ரெயில்வே கேட் மூடப்படுவதால் நூற்றுக்கணக்கான வாகனங்கள் நீண்ட வரிசையில் அணிவகுத்து நிற்பதால் காலை நேரங்களில் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்பவர்கள் குறித்த நேரத்துக்கு செல்ல முடியாமல் அவதிப்பட்டு வருகின்றனர்.

ரெயில்வே கேட் திறந்தவுடன் வாகனங்கள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயலும் போது போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு சில நேரங்களில் விபத்துகளும் நடைபெற்று வருகின்றன.

ரெயில்வே மேம்பாலம் அமைக்க வேண்டும்

போக்குவரத்து நெரிசலை தவிர்க்க சீர்காழி பணங்காட்டங்குடி சாலையில் உள்ள ரெயில்வே கேட்டில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்திய, மாநில அரசுகளுக்கு பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

எனவே மத்திய, மாநில அரசுகள் சீர்காழியில் ரெயில்வே மேம்பாலம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எதிர்பார்த்துள்ளனர்.


Next Story