

சென்னை,
இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் தமிழ் சினிமாவில் ‘மின்னலே’ படத்தின் மூலம் அறிமுகமானார். அதைத்தொடர்ந்து இவர் ‘விண்ணைத்தாண்டி வருவாயா’, ‘காக்க காக்க’, ‘வாரணம் ஆயிரம்’, ‘வேட்டையாடு விளையாடு’ என பல வெற்றி படங்களை கொடுத்திருக்கிறார். தமிழ் திரையுலகில் இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் கவுதம் வாசுதேவ் மேனன். இவர் இயக்கத்தில் வெளியான பல திரைப்படங்கள் மாபெரும் வெற்றி பெற்றுள்ளன. இந்த நிலையில், இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையில் 25 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளார். இதையொட்டி சில தினங்களுக்கு முன் சிறப்பு இசைக்கச்சேரி நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன் திரைத்துறையை சேர்ந்தவர்கள் மற்றும் ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில்,“இந்த அற்புதமான, சவால்கள் நிறைந்தத் துறையில் இருபத்தைந்து ஆண்டுகள் என்பது என்னுடைய தனிப்பட்ட சாதனை அல்ல. இது, என்னுடன் பயணித்த எண்ணற்ற தனிநபர்களின் கனவுகள், அர்ப்பணிப்பால் தான் சாத்தியமானது. என் மனதில் இருந்த கற்பனை கதாபாத்திரங்களுக்கு ஒரு ஆன்மாவையும், ஒரு குரலையும், ஒரு இதய துடிப்பையும் வழங்கியது நடிகர்களே, அவர்களுக்கு எனது நன்றிகள்.யாருடைய படைப்புகள் எனக்குள் அந்த தீப்பொறியைப் பற்ற வைத்ததோ, அந்த திரைப்பட மேதைகளுக்கும், என் ஆரம்ப கால படிகளுக்கு வழிகாட்டிய என் வழிகாட்டிகளுக்கும் நன்றிகள். என்னுடைய கதைகளை வாழ்க்கைக்குள் வரவேற்ற ரசிகர்களுக்கு நன்றிகள். சினிமா மீதான என் காதல் நீளும். உங்கள் அங்கீகாரமே எனக்குக் கிடைத்த மிகப்பெரிய வெகுமதி. அடுத்தப் படம் காத்திருக்கிறது” என்று நெகிழ்ச்சியாகப் பதிவிட்டிருக்கிறார்.
கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மாதவன், ரீமா சென் நடித்த ‘மின்னலே’ படம் வரும் 13ம் தேதி ரீ-ரிலீஸாகிறது.