

1976 முதல் 2001 வரையிலான காலகட்டத்தில் இளையராஜா இசையமைத்த சுமார் 134 திரைப்படங்களின் இசை மற்றும் ஒலிப்பதிவு உரிமைகள் தங்களுக்கே சொந்தம் எனச் சரிகம நிறுவனம் டெல்லி ஐகோர்ட்டில் வழக்குத் தொடர்ந்திருந்தது. அந்தத் திரைப்படங்களின் தயாரிப்பாளர்களுடன் முறைப்படி ஒப்பந்தம் செய்து, நிரந்தரமான காப்புரிமையைத் தாங்கள் பெற்றுள்ளதாகச் சரிகம தெரிவித்தது.
இளையராஜா இந்தப் பாடல்களைத் தனது சொந்தப் பாடல்கள் என கூறி அமேசான் மியூசிக், ஐ-டியூன்ஸ், ஜியோசாவ்ன் போன்ற டிஜிட்டல் தளங்களில் பதிவேற்றியது சட்டவிரோதம் என வாதிட்டது. 1957 காப்புரிமைச் சட்டத்தின்படி, ஒரு படத்திற்காக உருவாக்கப்படும் இசைக்கு அந்தத் தயாரிப்பாளரே முதல் உரிமையாளர் என்பதைச் சரிகம தரப்பு வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.
இந்த மனுவை விசாரித்த டெல்லி ஐகோர்ட் சரிகம நிறுவனத்தின் வாதத்தை ஏற்றுக்கொண்டு இடைக்காலத் தடை விதித்தது. இளையராஜா அல்லது அவர் சார்ந்த பிரதிநிதிகள், சரிகம வசம் உள்ள அந்த 134 படங்களின் பாடல்களைப் பயன்படுத்தவோ, உரிமை கோரவோ அல்லது மற்றவர்களுக்கு உரிமம் வழங்கவோ கூடாது. இந்தத் தடை விதிக்கப்படாவிட்டால் சரிகம நிறுவனத்திற்கு ஈடுசெய்ய முடியாத இழப்பு ஏற்படும் என டெல்லி ஐகோர்ட் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது.