

சென்னை,
நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் ரூ.21 கோடியே 29 லட்சம் கடன் வாங்கினார். அந்த கடனை லைகா நிறுவனம் அடைத்தது. அப்போது செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி, பணத்தை திருப்பிக் கொடுக்கும் வரை, விஷால் தயாரிக்கும் படத்தை லைகா நிறுவனத்திடம் கொடுக்கவேண்டும். ஆனால், ஒப்பந்தத்தை மீறி விஷால் தயாரித்த படத்தை வெளியிட முயற்சித்ததால், அவருக்கு எதிராக லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்தது.இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, கடன் தொகை ரூ.21 கோடியே 29 லட்சத்துக்கு 30 சதவீத வட்டியுடன் லைகா நிறுவனத்துக்கு விஷால் வழங்கவேண்டும் என்று உத்தரவிட்டது. இதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் விஷால் மேல்முறையீடு செய்தார்.
விஷால் நடிகர் தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல் முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, லைகா நிறுவனத்திடம் பெற்ற கடனை வட்டியுடன் செலுத்த வேண்டுமென்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தது. மேலும், 21 கோடி ரூபாயில், 10 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் வைப்பாக செலுத்த வேண்டும் நடிகர் விஷாலுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் படி ரூ10 கோடியை வைப்பாக செலுத்த 6 வார கால அவகாசம் வழங்கக் கோரி நடிகர் விஷால் தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு, சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் விஷால் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர், நடிகர் விஷாலுக்கு ஜிஎஸ்டி உள்ளிட்ட பிரச்சனைகள் இருப்பதால் ரூ10 கோடியை செலுத்துவதற்கு 6 வார கால வழங்க அவகாசம் வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது.
மனுவை விசாரித்த நீதிபதிகள், கால அவகாசம் வழங்கலாமா? என்பது குறித்து லைகா நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் 10 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.