25 வகை ஏகாதசி விரதங்கள்

ஏகாதசி விரதம் இருந்து பகவானை வழிபட்டு வந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும் என்பது நம்பிக்கை.
மகா விஷ்ணு
மகா விஷ்ணு
Published on

பெருமாளுக்கு மிகவும் உகந்த விரதம் ஏகாதசி விரதம் ஆகும். விரதங்களில் மிக உயர்ந்தது ஏகாதசி விரதம் என்று சொல்வார்கள். ஏகாதசி நாளில் விரதமிருந்து பகவானை வழிபட்டால் வாழும்போது செல்வச்செழிப்பும் வாழ்விற்குப் பின் மோட்சமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

ஏகாதசி திதி 15 நாட்களுக்கு ஒரு முறை வரும். இந்த திதியை புண்ணியகாலம் என்பர். இதில், மார்கழி மாத வளர்பிறையில் வரும் வைகுண்ட ஏகாதசி மிகவும் சிறப்பு வாய்ந்தது. ஆண்டுக்கு 24 ஏகாதசிகள் வரும். சில ஆண்டு 25 ஏகாதசிகள் வரும்.

25 ஏகாதசிகள்:

1. சித்திரை வளர்பிறை ஏகாதசி, காமதா ஏகாதசி.

2. சித்திரை தேய்பிறை ஏகாதசி, பாப மோசனிகா ஏகாதசி.

3. வைகாசி வளர்பிறை ஏகாதசி, மோகினி ஏகாதசி.

4. வைகாசி தேய்பிறை ஏகாதசி, வருதினி ஏகாதசி.

5. ஆனி வளர்பிறை ஏகாதசி, நிர்ஜல ஏகாதசி.

6. ஆனி தேய்பிறை ஏகாதசி, அபரா ஏகாதசி.

7. ஆடி வளர்பிறை ஏகாதசி, விஷ்ணு சயன ஏகாதசி.

8. ஆடி தேய்பிறை ஏகாதசி, யோகினி ஏகாதசி.

9. ஆவணி வளர்பிறை ஏகாதசி, புத்ரதா ஏகாதசி.

10. ஆவணி தேய்பிறை ஏகாதசி, காமிகா ஏகாதசி.

11. புரட்டாசி வளர்பிறை ஏகாதசி, பரிவர்த்தினி ஏகாதசி (பத்மாநாபா ஏகாதசி).

12. புரட்டாசி தேய்பிறை ஏகாதசி, அஜ ஏகாதசி.

13. ஐப்பசி வளர்பிறை ஏகாதசி, பாபாங்குசா ஏகாதசி.

14. ஐப்பசி தேய்பிறை ஏகாதசி, இந்திரா ஏகாதசி.

15. கார்த்திகை வளர்பிறை ஏகாதசி, பிரபோதினி ஏகாதசி.

16. கார்த்திகை தேய்பிறை ஏகாதசி, ரமா ஏகாதசி.

17. மார்கழி வளர்பிறை ஏகாதசி, வைகுண்ட ஏகாதசி.

18. மார்கழி தேய்பிறை ஏகாதசி, உற்பத்தி ஏகாதசி.

19. தை வளர்பிறை ஏகாதசி பீஷ்ம, புத்ரதா ஏகாதசி

20. தை தேய்பிறை ஏகாதசி, சபலா ஏகாதசி.

21. மாசி வளர்பிறை ஏகாதசி, ஜெய ஏகாதசி.

22. மாசி தேய்பிறை ஏகாதசி, ஷட்திலா ஏகாதசி.

23. பங்குனி வளர்பிறை ஏகாதசி, ஆமலகி ஏகாதசி.

24. பங்குனி தேய்பிறை ஏகாதசி, விஜயா ஏகாதசி.

25. கமலா ஏகாதசி. (மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை வரும் கூடுதல் மாதத்தில் இந்த ஏகாதசி வரும். இது அதிக மாசம் அல்லது புருஷோத்தம மாதம் என்று அழைக்கப்படுகிறது. இந்த ஏகாதசிக்குரிய தேதியை பஞ்சாங்கத்தில் பார்த்து அறிந்துகொள்ளலாம்)

விரதங்களின் சிறப்பு : ஏகாதசியைவிட சிறந்த விரதம் கிடையாது என்று பதினெட்டு புராணங்களும் கூறுகின்றன. அதனால், ஏகாதசி அன்று அதிகாலையில் எழுந்து நீராடி, விரதத்திற்கு தயாராக வேண்டும். அன்றைய தினம் துளசி இலைகளை பறிக்கக் கூடாது. எனவே, பூஜைக்கு தேவையான துளசியை முதல் நாளே பறித்து தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். அன்றைய தினம் முழுவதும் துளசி தீர்த்தம் மட்டும் அருந்தி விரதம் இருப்பது நல்லது. முடியாதவர்கள், பழங்களை நிவேதனம் செய்து சாப்பிடலாம். சிறிது பலகாரங்களையும் ஏற்றுக் கொள்ளலாம். எக்காரணம் கொண்டும் பகலில் தூங்கக்கூடாது. இரவில் கண்டிப்பாக பஜனை செய்ய வேண்டும். இது முடியாவிட்டால், விஷ்ணு பற்றிய நூல்களை படிக்கலாம்.

ஏகாதசி விரதம் இருந்து பகவானை வழிபட்டு வந்தால் பாவங்கள் நீங்கும், உடல் ஆரோக்கியமாகும், வீட்டில் செல்வம் பெருகும், சந்ததி வளரும் என்பது நம்பிக்கை. ஏகாதசிக்கு முன்தினமான தசமி அன்று இரவு பழங்களை மட்டும் சாப்பிடுவது நல்லது. இதனால், மறுநாள் உண்ணா நோன்பு இருக்கும் போது, உடலில் உள்ள கழிவுகள் விரைவில் வெளியேறும். விரதத்தை முடித்த உடன், ஜீரணமாவதற்கு கடினமான உணவுகளை உட்கொள்ளக்கூடாது. உபவாசத்தின்போது, சுருங்கிப்போன குடலை இயங்கச் செய்ய முதலில் பழவகைகளையும் சுலபமாக ஜீரணமாகும் உணவுகளையும் மட்டுமே சாப்பிட வேண்டும்.

Also Read
ஏகாதசி விரதம் இருப்பவர்கள் இதில் மட்டும் கவனமா இருங்க..!
மகா விஷ்ணு

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com