

மயிலாடுதுறையில் பழமை வாய்ந்த ஸ்ரீ சாந்தநாயகி சமேத புனுகீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. வேத காலத்தில் தட்சனின் யாகத்தில் கலந்துகொண்டதால் சாபம் பெற்ற இந்திரன், தனது சாபம் நீங்க புனுகு பூனை வடிவம் எடுத்து இங்கு உள்ள சிவன் மற்றும் சாந்தநாயகி அம்மனை வழிபாடு செய்ததாக புராண வரலாறு கூறுகிறது.
மேலும் அடர்ந்த வனமாக இருந்த பகுதியில் புனுகு பூனை உயர்ந்த வாசனை திரவியமான புனுகினை சாத்தி சிவலிங்கத்திற்கு பூஜை செய்தது என்றும், தஞ்சையை ஆண்ட சோழ மன்னன் இதனை அறிந்து காட்டை சீர்திருத்தி கோவிலை அமைத்தான் என்றும் வரலாறு தெரிவிக்கின்றது.
இத்தகைய பழமை வாய்ந்த இக்கோவிலில் 32ஆம் ஆண்டு லட்சதீப திருவிழா நடைபெற்றது. திரளான பக்தர்கள் விளக்குகள் ஏற்றி சுவாமி மற்றும் அம்பாளை தரிசனம் செய்தனர்.
கோவில் வளாகத்தில் நமச்சிவாய வாழ்க என்ற எழுத்து வடிவில் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. சிவன், பார்வதி, விநாயகர், முருகர் உள்ளிட்ட கடவுள்களின் உருவங்களை ரங்கோலியாக வரைந்து, அருகில் அகல் விளக்குகளில் தீபம் ஏற்றினர். கோவில் முழுவதும் அகல் விளக்கு தீபங்கள் மற்றும் மின்னொளியால் ஜொலித்தது.