

விழுப்புரம் மாவட்டம் செஞ்சி சத்திர தெருவில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் திருக்கோவிலில் மயான கொள்ளை விழா விமரிசையாக நடைபெற்றது. இதனை முன்னிட்டு மகா சிவராத்திரி அன்று காலை 9 மணிக்கு அங்காளம்மனுக்கு பால் அபிஷேகமும், ஊரணி பொங்கல் விழாவும், தொடர்ந்து பொன்பத்தி ஏரிக்கரையில் அண்ணமார் பூஜையும் நடைபெற்றது.
17ஆம் தேதி அமாவாசை அன்று காலையில் பக்தர்கள் குறத்தியாக அவதாரம் எடுத்து குறி சொல்லி வருதல், மூலவர் அங்காளம்மனுக்கு பல்வேறு சிறப்பு திரவியங்களால் அபிஷேகம், சிறப்பு பூஜை, மகா தீபாராதனை நடைபெற்றது.
மாலையில் விழாவின் சிகர நிகழ்வான மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. இதனை முன்னிட்டு கோவிலில் இருந்து அங்காளம்மன் சிம்ம வாகனத்தில் ஊர்வலமாக சென்று சங்கராபரணி ஆற்றங்கரையில் உள்ள மயானத்தை அடைந்தார். பின்னர் அங்கு மயான கொள்ளை நிகழ்ச்சி நடைபெற்றது. பூசாரிகள் சிறப்பு பூஜைகள் செய்ததை தொடர்ந்து பக்தர்கள் கொழுக்கட்டை, சுண்டல், தானியங்கள் உள்ளிட்டவைகளை வாரி இறைத்து தங்கள் வேண்டுதலை நிறைவேற்றி சாமி தரிசனம் செய்தனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.