

கைசிக விருத்தாந்த ஸ்தலமாக திகழும் திருக்குறுங்குடி அழகிய நம்பிராயர் கோவிலில் ஆண்டு தோறும் 2 நாள் தெப்பத் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கமாகும். அவ்வகையில் இந்தாண்டு தெப்ப திருவிழா நேற்று விமரிசையாக தொடங்கியது.
இதனை முன்னிட்டு காலையில் பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம், பூஜை, தீபாராதனை நடந்தது. இரவில் மேள தாளங்கள் முழங்கிட அழகிய நம்பிராயர், தாயார்களுடன் தெப்பக்குளத்தின் நீராழி மண்டபத்திற்கு எழுந்தருளினார். அங்கு சிறப்பு பூஜை, தீபாராதனை நடந்தது.
அதன்பின் ராமானுஜ ஜீயர் சுவாமி முன்னிலையில் அழகியநம்பிராயர் தாயார்களுடன், அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருளி நீராழி மண்டபத்தை 12 முறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். வண்ண விளக்குகளால், வண்ண மலர்களால் தெப்பம் ஜொலித்தது. பல்வேறு ஊர்களில் இருந்தும் வந்திருந்த ஏராளமான பக்தர்கள் இந்நிகழ்வில் கலந்து கொண்டு பெருமாளை தரிசனம் செய்தனர்.
இரண்டாம் நாளான இன்று திருமலைநம்பி தெப்பத்தில் வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.