சைனீஸ் உணவக ஊழியர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதில் 2 வாலிபர்களின் உடல் வெந்தது

சைனீஸ் உணவக உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்த வாலிபர்கள் மீது ஆத்திரமடைந்த கடை ஊழியர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதில் 2 வாலிபர்களின் உடல் வெந்தது.
சைனீஸ் உணவக ஊழியர் கொதிக்கும் எண்ணெயை ஊற்றியதில் 2 வாலிபர்களின் உடல் வெந்தது
Published on

தானே,

தானே மாவட்டம் உல்லாஸ்நகர் வீனஸ் சவுக் பகுதியில் சைனீஸ் உணவு கடை ஒன்று உள்ளது. சம்பவத்தன்று இரவு 11.30 மணியளவில் இந்த கடையில் அந்த பகுதியை சேர்ந்த விக்கி மாஸ்கே என்பவர் தனது நண்பர்களுடன் வந்து சாப்பிட்டார். பின்னர் சைனீஸ் உணவு சுவை இல்லை என்று கடை உரிமையாளரிடம் வாக்குவாதம் செய்ததாக கூறப்படுகிறது.

மேலும் தனது சகோதரர் தீபக் மாஸ்கேவை (வயது29) அங்கு வரும்படி அழைத்தார். இதையடுத்து அவர் தனது நண்பர்கள் சிலருடன் அங்கு வந்தார்.

வாக்குவாதம் முற்றிய நிலையில், ஆத்திரமடைந்த கடை ஊழியர் ஒருவர் திடீரென அங்கு வாணலியில் கொதித்து கொண்டிருந்த எண்ணெயை ஒரு குவளையில் கோரி தீபக் மாஸ்கே மீது கூற்றினார். இதில் எண்ணெய் அவரது முகத்திலும், அருகில் நின்று கொண்டிருந்த அவரது நண்பர் விஜய் பாகரே என்பவர் வயிற்றிலும் விழுந்தது.

முகம் மற்றும் வயிறு வெந்து போனதில் இருவரும் வேதனை தாங்க முடியாமல் அலறி துடித்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த விக்கி மாஸ்கே மற்றும் அவரது நண்பர்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக உல்லாஸ்நகர் சென்டிரல் மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு இருவருக்கும் டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக வித்தல்வாடி போலீசார் சைனீஸ் கடை உரிமையாளர் மற்றும் எண்ணெயை ஊற்றிய ஊழியர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com