

நாமக்கல்,
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போராடிய பொதுமக்கள் மீது போலீசார் நடத்திய துப்பாக்கி சூட்டில் 13 பேர் பலியானார்கள். இந்த சம்பவத்தை கண்டித்து நேற்று தமிழகம் முழுவதும் தே.மு.தி.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
நாமக்கல் தெற்கு மற்றும் வடக்கு மாவட்ட தே.மு.தி.க. சார்பில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவத்தை கண்டித்தும், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தியும் நாமக்கல் பூங்கா சாலையில் நேற்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு மாநில மகளிரணி செயலாளர் மாலதி, மாவட்ட செயலாளர் விஜயன் ஆகியோர் தலைமை தாங்கினர். நாமக்கல் நகர செயலாளர் அம்மன் வெங்கடாசலம் வரவேற்றார்.
இதில் மாவட்ட அவைத் தலைவர்கள் சீனிவாசன், முத்துசாமி, மாவட்ட பொருளாளர் சத்தியா உள்ளிட்டோர் பேசினர். இந்த ஆர்ப்பாட்டத்தின் போது தூத்துக்குடியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்களுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது. மேலும் துப்பாக்கி சூட்டிற்கு காரணமான மத்திய, மாநில அரசுகளை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர்.
இதில் மாவட்ட துணை செயலாளர்கள் செல்வி, சிவா, பொங்கியண்ணன், விஜய்கமல், மணி உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.