

மீஞ்சூர்,
திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரை அடுத்த நாலூர் ஏரிக்கரைக்கு அருகில் இந்துஜா நகர் பகுதியில் தனியாருக்கு சொந்தமான 2 குடோன்கள் இருந்தது. இதில் வேளாண் தொழிலுக்கு பயன்படுத்தும் களைக்கொல்லி, பூஞ்சானகொல்லி, பூச்சிக்கொல்லி உட்பட 40 வகையான மருந்துகள் அட்டைப்பெட்டிகளில் காலாவதியாகி அரசு அனுமதி இல்லாமல் இருந்தது. இது குறித்து தகவலறிந்த போலீசார் மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்திற்கு சென்று காலாவதியான பூச்சிக்கொல்லி மருந்துகள் இருப்பதை கண்டுபிடித்து குடோன்களுக்கு கடந்த 4-ந்தேதி சீல் வைத்தனர்.
அதன் பின்னர் திருவள்ளூர் மாவட்ட வேளாண் துறை அதிகாரிகள் வந்து பூச்சிக்கொல்லி மருந்துகளை ஆய்வு செய்தனர். தமிழக அரசின் வேளாண்மை துறை இயக்குனரகம் மீஞ்சூரை அடுத்த நாலூர் கிராமத்தில் பதுக்கி வைத்திருந்த வேளாண் தொழில் சார்ந்த பூச்சிக்கொல்லி மருந்துகள் பற்றிய விவரங்கள், தயாரிக்கப்பட்ட தேதி, காலாவதியான தேதி மருந்துகளின் விவரம், கம்பெனிகளின் பெயர் போன்றவற்றை தர மதிப்பீடுகள், அளவுகள் குறித்து கணக்கெடுக்கும் பணி தொடங்க உத்தரவிட்டிருந்தது.