

விருதுநகர்,
விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு அண்ணா தொழிற்சங்க பேரவை ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
இங்கு பேரவையின் நுழைவுவாயில் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இங்கு வந்து பார்த்தால் பொதுக்கூட்டம் போல் திரண்டு உள்ளீர்கள்.
உங்கள் பேரவை செயலாளர் முதல்-அமைச்சரிடம் செல்வாக்கு பெற்றவர். உங்களுக்கு என்னென்ன தேவை என்பதை அவர் நன்கு அறிவார். பேச்சுவார்த்தையின் போது அதனை உங்களுக்கு பெற்றுத்தர அவரால் முடியும்.
கடந்தாண்டு போக்குவரத்துக்கழக ஓய்வூதியர்களுக்கு ரூ.ஆயிரத்து 13 கோடி ஒதுக்கப்பட்டிருந்தது. நடப்பு ஆண்டில் ரூ. 966 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஓய்வு பெற்ற போக்குவரத்து தொழிலாளர்கள் பயன் அடைந்திருப்பார்கள். தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலின் மக்கள் கிராமசபை கூட்டம் நடத்துகிறார். இந்த கூட்டம் நடத்துவதற்கு பஞ்சாயத்து தலைவர்கள் இருக்கிறார்கள்.
போக்குவரத்து கழக தொழிலாளர்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பாதுகாப்பு கவசமாக உள்ளார்.
7 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெற வேண்டும். அதற்கு நீங்கள் உழைக்க வேண்டும்.
பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும் முதல்-அமைச்சரை சந்தித்து பேசும் போது உங்கள் கோரிக்கைகள் குறித்து வலியுறுத்துவேன். அவரும் உறுதியாக நிறைவேற்றித்தருவார்.
இவ்வாறு அவர் கூறினார்.
கூட்டத்தில் சந்திரபிரபா எம்.எல்.ஏ., மாவட்ட பஞ்சாயத்து தலைவர் வசந்தி மான் ராஜ், மேற்கு மாவட்ட அவைத்தலைவர் எஸ்.ஆர்.விஜயகுமரன், விருதுநகர் ஒன்றிய செயலாளர்கள் கண்ணன், தர்மலிங்கம், ராஜசேகர், நகர செயலாளர் முகமது நயினார், அண்ணா தொழிற்சங்க பேரவை நிர்வாகிகள், மண்டல செயலாளர் குருசாமி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.