

நெல்லிக்குப்பம்,
தமிழகத்தில் ஊரடங்கு உத்தரவு காரணமாக டாஸ்மாக் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டுள்ளன. இதையடுத்து சிலர் சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வருகின்றனர். இந்த நிலையில் நடுவீரப்பட்டு அடுத்த பத்திரக்கோட்டை பகுதியில் சிலர் சாராயம் காய்ச்சுவதாக மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் பண்ருட்டி மதுவிலக்கு அமல்பிரிவு இன்ஸ்பெக்டர் தாரகேஸ்வரி தலைமையிலான போலீசார் பத்திரக்கோட்டை பகுதியில் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கு 3 இடங்களில் சாராயம் காய்ச்சுவதற்காக பேரல்களில் ஊறல் பதப்படுத்தி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து 3 இடங்களில் இருந்த 150 லிட்டர் சாராய ஊறலை பறிமுதல் செய்து அழித்தனர். மேலும் இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பத்திரக்கோட்டையை சேர்ந்த சுதாகர் (வயது 26), முருகானந்தம்(37), பாண்டியராஜன் (33), பிரகாஷ் (37) ஆகிய 4 பேரை கைது செய்தனர். மேலும் இச்சம்பவத்தில் தொடர்புடைய காமராஜன் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.