தஞ்சையில் இருந்து கொண்டு வரப்பட்ட மேலும் 5 மான்கள் கோடியக்கரை சரணாலயத்தில் விடப்பட்டன

தஞ்சையில் இருந்து கொண்டு வரப்பட்ட மேலும் 5 மான்கள் கோடியக்கரை சரணாலயத்தில் விடப்பட்டன.
தஞ்சையில் இருந்து கொண்டு வரப்பட்ட மேலும் 5 மான்கள் கோடியக்கரை சரணாலயத்தில் விடப்பட்டன
Published on

வேதாரண்யம்,

தஞ்சை சிவகங்கை பூங்கா, ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.8 கோடியே 10 லட்சம் மதிப்பீட்டில் புனரமைக்கப்பட்டு வருகின்றது. இதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பூங்காவில், மான்கள் வளர்க்கப்பட்டு வருகின்றன. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் நகரங்களில் விலங்குகள் பராமரிக்க கூடாது என சட்டம் உள்ளதால் பூங்காவில் உள்ள மான்கள் மற்றும் நரி, சீமை எலி, புறா ஆகியவற்றை இடமாற்றம் செய்வது என முடிவு செய்யப்பட்டது.

அதன்படி பூங்காவில் உள்ள 41 மான்களையும் நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள கோடியக்கரை சரணாலயத்துக்கு கொண்டு செல்வது என முடிவு செய்யப்பட்டன.

இதை தொடர்ந்து சிவகங்கை பூங்காவில் இருந்து முதல் கட்டமாக 27 பெண் மான்களும், 1 ஆண் மானும் என மொத்தம் 28 மான்களை கடந்த 9-ந்தேதி கோடியக் கரைக்கு கொண்டு வந்து காட்டில் விடப்பட்டன. அதை தொடர்ந்து நேற்று 2-ம் கட்டமான தஞ்சை சிவகங்கை பூங்காவில் இருந்து 5 மான்கள் கோடியக்கரைக்கு கொண்டு வரப்பட்டன.

இதில் நகராட்சிக்கு சொந்தமான வாகனத்தில் 4 ஆண் மான்களும், 1 பெண் மானும் கொண்டு வரப்பட்டன. இதை தொடர்ந்த 5 மான்களும் கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தின் மையப்பகுதியான யானைபள்ளத்தில் விடப்பட்டன. வாகனத்தில் இருந்து திறந்து விடப்பட்டவுடன் மான்கள் துள்ளி குதித்து காட்டுக்குள் சென்றன.

இயற்கை ஆர்வலர் ஒருவர் கூறுகையில், 25 ஆண்டுகளுக்கு முன்பு கோடியக்கரை வனவிலங்கு சரணாலயத்தில் இருந்து ஒரு ஆண் மற்றும் பெண் மான் சிவகங்கை பூங்காவிற்கு கொண்டு செல்லப்பட்டது. இதுதற்போது 41 மான்களாக பெருகி உள்ளது. இந்த 41 மான்களும் தங்களின் பூர்வீக இடமான கோடியக்கரைக்கு வந்து சேர்ந்து உள்ளது என்றார். மீதமுள்ள 8 மான்களும் விரைவில் கோடியக்கரைக்கு கொண்டு வந்து விடப்படும் என வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com