

புதுச்சேரி,
புதுவை கவர்னர் கிரண்பெடி நேற்று தாவரவியல் பூங்காவில் ஆய்வு மேற்கொண்டார். அவரை வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தி மற்றும் அதிகாரிகள் வரவேற்றனர்.
தாவரவியல் பூங்காவை சுற்றிப்பார்த்த கவர்னர் கிரண்பெடி, ரக்ஷாபந்தனை நினைவுகூறும் விதமாக அங்கிருந்த 192 ஆண்டுகள் பழமையான மரத்துக்கு ராக்கி கயிறு கட்டினார். மரங்களை பாதுகாக்கவேண்டும் என்றும் அவர் ஊழியர்களிடம் வலியுறுத்தினார்.
மேலும் அந்த மரத்துக்கு வேளாண்துறை இயக்குனர் பாலகாந்தியின் பெயரையும் சூட்டினார். மற்ற மரங்களுக்கு தாவரவியல் பூங்காவில் பணிபுரியும் ஊழியர்களின் பெயர்களை சூட்டுமாறும் அதிகாரிகளிடம் அறிவுறுத்தினார்.
தொடர்ந்து தாவரவியல் பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள மழைநீர் சேகரிப்பு அமைப்பினை பார்வையிட்டார். மேலும் மகளிர் சுய உதவிக்குழுக்கள் மூலம் நடத்தப்படும் கடையினையும் பார்வையிட்டார்.
அதன்பின் நேராக கடற் கரைக்கு வந்த கவர்னர் கிரண்பெடி அங்கு கொட்டும் மழையிலும் தூய்மைப்பணி நடப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அங்கு பணியில் ஈடுபட்டிருந்த ஊழியர்களை பாராட்டினார். பின்னர் கவர்னர் மாளிகைக்கு புறப்பட்டுச்சென்றார்.