“வடமாநிலங்களை போன்ற துப்பாக்கி கலாசாரத்தை அனுமதிக்க முடியாது” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து

வடமாநிலங்களை போன்ற துப்பாக்கி கலாசாரத்தை அனுமதிக்க முடியாது என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
“வடமாநிலங்களை போன்ற துப்பாக்கி கலாசாரத்தை அனுமதிக்க முடியாது” மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
Published on

மதுரை,

மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்த கப்பலூர் சுங்கச்சாவடி மையத்தில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் அங்கிருந்த டோல்கேட் ஊழியர்களுக்கும், காரில் வந்தவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. அப்போது காரில் வந்த கும்பல் துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பியது.

இந்த சம்பவம் தொடர்பாக திருச்சியை சேர்ந்த தனசேகரன், ராஜா, ஹரிகிருஷ்ணன், சசிகுமார் உள்ளிட்ட பலரை போலீசார் கைது செய்தனர். பலர் மீது குண்டர் சட்ட நடவடிக்கை பாய்ந்தது. இந்த வழக்கில் குண்டர் சட்டத்தின்கீழ் அடைக்கப்பட்ட சசிகுமார் மீதான குண்டர் சட்ட நடவடிக்கையை ரத்து செய்யக்கோரி, அவரது சகோதரி தனலட்சுமி, மதுரை ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.

துப்பாக்கி கலாசாரம்

இந்த மனுவை வீடியோ கான்பரன்சிங் மூலம் நீதிபதிகள் பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் விசாரித்தனர்.

அப்போது நீதிபதிகள், பீகார், உத்தரபிரதேசம் போன்ற வடமாநிலங்களில் உள்ளதை போன்ற துப்பாக்கி கலாசாரத்தை தமிழகத்தில் அனுமதிக்க முடியாது. அதன் அடிப்படையில் மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையதல்ல என்றனர்.

பின்னர் மனுதாரர் சார்பில் ஆஜரான வக்கீல், இந்த மனு மீது வாதாடுவதற்கு அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரினார். இதையடுத்து நீதிபதிகள், இந்த வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com