

செய்யாறு,
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறை அடுத்த வெம்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேஸ்வரி (வயது 83), ஓய்வுபெற்ற ஆசிரியை. இவர், 20 ஆண்டுகளுக்கு மேலாக ஓய்வூதியம் பெற்று வருகிறார். இவருக்கு 80 வயதுக்கு மேலாகி விட்டதால் அரசு மூலம் கூடுதலாக 20 சதவீத ஓய்வூதிய நிதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் கடந்த 2 ஆண்டிற்கான தொகையான ரூ.50 ஆயிரம் பெற செய்யாறு சார் நிலை கருவூலகத்தை ராஜேஸ்வரியின் தம்பி பத்மராஜ் அணுகியபோது சார்நிலை கருவூலக உதவி அலுவலர் சாஜிதா (37), ரூ.10 ஆயிரம் லஞ்சம் கேட்டதாக கூறப்படுகிறது. இதனை கொடுக்க விருப்பமில்லாத பத்மராஜ் திருவண்ணாமலை லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் கொடுத்தார். லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைபடி ரசாயனம் தடவிய 10 ஆயிரம் ரூபாய் நோட்டுகளை சார்நிலை கருவூலக உதவி அலுவலரான சாஜிதாவிடம், பத்மராஜ் கொடுத்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீஸ் டி.எஸ்.பி. சரவணக்குமார், இன்ஸ்பெக்டர்கள் அருள்பிரசாத், ரஜினிகாந்த் ஆகியோர் சாஜிதாவை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். கைது செய்யப்பட்ட சாஜிதா திருவண்ணாமலை முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.