

கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானலில், கிறிஸ்துமஸ் பண்டிகையை வரவேற்கும் விதத்தில் ஆண்டுதோறும் டிசம்பர் மாதத்தில் சிலுவை பூக்கள் பூத்துக்குலுங்குவது வழக்கம்.
அதன்படி தற்போது கொடைக்கானல் பிரையண்ட் பூங்காவில் ஏராளமான பூக்கள் பூத்துக்குலங்குகின்றன. இதேபோல் கொடைக்கானல் எம்.எம்.தெரு, குறிஞ்சி நகர் உள்பட நகரின் பல்வேறு இடங்களிலும் சிலுவை பூக்களை காண முடிகிறது.
இந்த மலர்களின் மகரந்த இதழ்கள், சிலுவை வடிவில் இருப்பதால் சிலுவை பூக்கள் என்று அழைக்கப்படுகிறது. மஞ்சள், இளஞ்சிவப்பு, கருஞ்சிவப்பு ஆகிய வண்ணங்களில் சிலுவை பூக்கள் காட்சி அளிக்கின்றன. இவை குளிர்பிரதேசம் மற்றும் நிழலில் வளரும் தன்மை கொண்டது.
குறிப்பாக பிரஞ்சு, கயானா, வெனிசுலா, கொலம்பியா மற்றும் வடக்கு பிரேசில் உள்ளிட்ட நாடுகளில் அதிக அளவில் சிலுவை பூக்கள் காணப்படுகின்றன. ஆங்கிலேய ஆட்சி காலத்தில் வெளிநாட்டினர் இந்த தாவரங்களை கொடைக்கானலுக்கு இறக்குமதி செய்யப்பட்டது என்று கூறப்படுகிறது.
கண்களை கொள்ளை கொள்ளும் வகையில் கொடைக்கானலில் பூத்துக்குலுங்கும் சிலுவை பூக்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்துள்ளது.