கிருஷ்ணகிரியில் நாய்கள் கண்காட்சி

கிருஷ்ணகிரியில் நாய்கள் கண்காட்சி நேற்று நடந்தது.
கிருஷ்ணகிரியில் நாய்கள் கண்காட்சி
Published on

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில், அகில இந்திய மாங்கனி கண்காட்சி நடந்து வருகிறது. இதன் தொடர்ச்சியாக நேற்று கால்நடை பராமரிப்புத்துறை சார்பில், நாய்கள் கண்காட்சி நடைபெற்றது. பெங்களூரு கால்நடை மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் எத்திராஜ் தலைமையில், மண்டல இணை இயக்குனர் மனோகரன், துணை இயக்குனர் இளங்கோவன், உதவி இயக்குனர்கள் அருள்ராஜ், மரியசுந்தர், இளவரசன், டாக்டர் ரமேஷ் ஆகியோர் இதற்கு நடுவர்களாக செயல்பட்டனர்.

இந்த கண்காட்சியில், 23 ரகங்களைச் சேர்ந்த 130-க்கும் மேற்பட்ட நாய்கள் பங்கேற்றன. இதில், கட்டளைக்கு கீழ் படிதல், குணாதிசயம், உடல் ஆரோக்கியம், நடை போன்றவைகளை டாக்டர் குழுவினர் ஆய்வு செய்து சிறந்த நாய்களை தேர்ந்தெடுத்தனர்.

இதில், ஒட்டு மொத்த சாம்பியன் மற்றும் முதல் பரிசை கிருஷ்ணகிரியைச் சேர்ந்த சரண் பிரசாந்த் என்பவரின் ராஜபாளையம் நாய் பெற்றது. 2-ம் பரிசை முத்துகுமரன் என்பவரின் ஜெர்மன் செப்பர்டு, 3-ம் பரிசை ராகவேந்தர் என்பவரின் கிரேடன்,4-வது பரிசை பிரகாஷ் என்பவரின் யாக்கர் டேரியர், 5-வது பரிசை பிரபாகர் என்பவரின் மினிடின் என்ற நாயும் பெற்றது.

பின்னர் காவல்துறையின் சார்பில் 3 நாய்கள் பங்கேற்று சாகசங்களை நிகழ்த்தி காட்டின. கண்காட்சியில் பங்கேற்ற அனைத்து நாய்களுக்கும் நோய் தடுப்பு ஊசி போடப்பட்டது.

X

Daily Thanthi
www.dailythanthi.com