

கூடலூர்
கோடை சீசன் தொடங்கி உள்ளதால், நீலகிரி மாவட்டத்துக்கு சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்து வருகிறது. தற்போது தமிழ் புத்தாண்டு, ஈஸ்டர் பண்டிகை, வார விடுமுறை என தொடர் விடுமுறை விடப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் வருகை மேலும் அதிகரித்தது. இதன் காரணமாக கூடலூர் ஊசிமலை காட்சிமுனை, முதுமலை புலிகள் காப்பகம் உள்ளிட்ட இடங்களில் கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
தொடர்ந்து முதுமலை வனப்பகுதியில் சவாரி செய்து, தெப்பக்காடு முகாமில் வளர்ப்பு யானைகள் பராமரிப்பு மற்றும் அதற்கு உணவு அளிக்கும் நிகழ்ச்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர். மசினகுடியில் வாகன சவாரி செல்லும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது. இதனால் ஊரடங்கால் வாழ்வாதாரத்தை இழந்த வாடகை வாகன தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. மேலும் வனத்துறைக்கும் வருவாய் ஏற்பட்டு உள்ளது.