

மும்பை,
மராட்டியத்தில் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. முதல்-மந்திரியாக பா.ஜனதாவின் தேவேந்திர பட்னாவிஸ் இருந்து வருகிறார். இந்த கூட்டணி ஆட்சியின் தற்போதைய பதவி காலம் நவம்பர் மாதம் 9-ந்தேதி முடிவடைகிறது. எனவே அதற்குள் மராட்டிய சட்டசபைக்கு தேர்தல் நடத்தி ஆக வேண்டும்.
எனவே தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் முழுவீச்சில் தயாராகி வருகின்றன.
இதில், ஆளும் பா.ஜனதா- சிவசேனா கூட்டணி ஆட்சியை தக்க வைத்துக்கொள்ளவும், காங்கிரஸ்- தேசியவாத காங்கிரஸ் கூட்டணி ஆட்சியை கைப்பற்றவும் தீவிரம் காட்டி வருகின்றன. தொகுதி பங்கீடு குறித்த பேச்சுவார்த்தை நடந்து வருகின்றன.
மராட்டியத்தில் சட்டசபை தேர்தலை நடத்த தேர்தல் ஆணையம் ஆயத்தமாகி வருகிறது.
இந்தநிலையில், மராட்டிய சட்டசபை தேர்தல் தேதி ஓரிரு நாட்களில் வெளியாக வாய்ப்பு இருப்பதாக தேர்தல் ஆணைய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தசரா, தீபாவளி ஆகிய பண்டிகைகள் உள்ளிட்டவற்றை பரிசீலித்து இந்த தேதிகள் அறிவிக்கப்படும் என்றும், பாதுகாப்பு காரணங்களுக்கு சட்டசபை தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது.
தேர்தல் தேதி அறிவிக்கப்படும் பட்சத்தில் உடனடியாக மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறை அமலுக்கு வந்து விடும்.