

மும்பை,
நாட்டிலேயே மராட்டியத்தில் தான் கொரோனா பாதிப்பு அதிகளவில் உள்ளது. இந்தநிலையில் நேற்று முதல்- மந்திரி உத்தவ் தாக்கரே என் குடும்பம், எனது பொறுப்பு என்ற திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ் அரசு தொண்டு நிறுவனங்கள், தன்னார்வலர்கள் உதவியுடன் வீடு வீடாக சென்று பொதுமக்களுக்கு கொரோனா விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.
மேலும் வீட்டில் உள்ளவர்களுக்கு உடல் வெப்பநிலை, ஆக்சிஜன் சோதனை செய்யப்படும். இதில் கொரோனா அறிகுறி உள்ளவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சைக்கு அனுப்பப்படுவார்கள்.
இதற்கிடைய என் குடும்பம், எனது பொறுப்பு திட்டத்தை மாநில சுகாதாரத்துறை மந்திரி ராஜேஸ் தோபே முன்னிலையில் காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்த முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே, அந்த திட்டத்தை வெற்றி பெற செய்ய மண்டல கமிஷனர்கள் மற்றும் மாவட்ட கலெக்டர்களுக்கு உத்தரவிட்டார்.
மேலும் இதுகுறித்து அவர் கூறுகையில், கடந்த 5 மாதங்களாக இரவு, பகலாக அரசு நிர்வாகம் கொரோனாவை எதிர்கொண்டு வருகிறது. எனினும் நமக்கான சவால் இன்னும் முடியவில்லை. ஒருவர் கூட தொற்றால் பாதிக்கப்பட கூடாது என்பதே நமது தாராக மந்திரம். நமது குழுவினர் வீடு வீடாக சென்று இதை பொது மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்றார்.