செய்யூர் அருகே கார்-லாரி மோதல்; தந்தை, மகள் பலி டிரைவர் கைது

செய்யூர் அருகே காரும் லாரியும், நேருக்கு நேர் மோதிய விபத்தில் புதுச்சேரியை சேர்ந்த தந்தை, மகள் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
செய்யூர் அருகே கார்-லாரி மோதல்; தந்தை, மகள் பலி டிரைவர் கைது
Published on

மதுராந்தகம்,

புதுச்சேரி ஞானபிரகாசம் தெருவை சேர்ந்தவர் கலியபெருமாள் (வயது 40). இவர் புதுச்சேரியில் இருசக்கர வாகன உதிரி பாகங்கள் கடை நடத்தி வந்தார். இவரது மகள் தேவதர்ஷினி (16). இவர் அங்குள்ள பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தார். இவர்கள் இருவரும் புதுச்சேரியில் இருந்து சென்னைக்கு காரில் வந்தனர். கலியபெருமாள் காரை ஓட்டி வந்தார்.

நேற்று காலை 11 மணியளவில் காஞ்சீபுரம் மாவட்டம் செய்யூரை அடுத்த விலம்பூர் என்ற இடத்தில் வரும்போது எதிரே வந்த டிப்பர் லாரி, கார் மீது மோதியது.

இதில் படுகாயம் அடைந்த கலியபெருமாள், தேவதர்ஷினி இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

தகவல் அறிந்த சூனாம்பேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராமு உள்ளிட்ட போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவர்களுடைய உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

லாரி டிரைவரான கடலூர் மாவட்டம் சிதம்பரம் தாலுகா அய்யனார் கிராமத்தை சேர்ந்த ராமச்சந்திரன் (33) என்பவரை போலீசார் கைது செய்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com