

திருச்சி,
திருச்சி ரெயில்வே கோட்டத்தில் போலீஸ் ஏட்டாக பணியாற்றி வரும் பெருமாள்சாமி என்பவர் தனது மனக்குமுறலை வெளிப்படுத்தி ரெயில்வே போலீஸ் சூப்பிரண்டிடம் பேசுவது போன்ற ஆடியோ ஒன்று வாட்ஸ்-அப் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த ஆடியோவில், ஐயா அவர்களுக்கு வணக்கம், நான் பெருமாள்சாமி பேசுகிறேன் என்று தொடங்கி, திருச்சி ரெயில்வேயில் போலீசாரின் குறைதீர்க்கும் முகாம் நியாயமாக நடப்பது கிடையாது. 90 வயதான தனது தாயை பராமரிக்க ஆள் இல்லாததால் என்னை சொந்த ஊரான பழனிக்கு பணியிடமாற்றம் செய்யக்கோரி பலமுறை மனு அளித்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் கட்டாய விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்தேன்.
ஆனால் கட்டாய விருப்ப ஓய்வு வர 3 மாதம் ஆகும் என்கிறார்கள். ஆனால் அந்த 3 மாதத்துக்குள் எனது தாயை பராமரிக்க ஆள் கிடையாது. எனது பிரச்சினையை போலீஸ் சூப்பிரண்டு அலுவலக இன்ஸ்பெக்டரிடம் கூறினால் அவர் அதை காது கொடுத்துக்கூட கேட்கவில்லை. நான் போய் நின்னதுமே சப்-இன்ஸ்பெக்டரை கூப்பிட்டு, இவரை கிளியர் பண்ணுங்கிறாங்க. சப்-இன்ஸ்பெக்டர் வந்து என்னை பிடித்து இழுத்துட்டு போய்ட்டாரு. நியாயமாக குறைதீர்க்கும் முகாம் நடக்க வேண்டும் என்றால் திருச்சி ரெயில்வேயில் என்ன செய்ய வேண்டும் என்பது போன்ற ஆடியோ பதிவாகி இருந்தது. இந்த ஆடியோ சமூக வலைதளத்தில் பரவி வருவது ரெயில்வே போலீஸ் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.