தேனி கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்

தேனி கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தேனி கூட்டுறவு இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு ரேஷன் கடை பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
Published on

தேனி:

தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்கம் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு வருகின்றன. கொரோனா காலத்தில் பணி செய்து வருவதால் பயோமெட்ரிக் முறையில் கைவிரல் ரேகை பதிவுக்கு பதிலாக கண் விழித்திரை மூலமாக விற்பனை செய்யும் முறையை ஆவணம் செய்ய வேண்டும், கூட்டுறவுத்துறையின் கீழ் பணிபுரியும் ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஊதியத்தில் பிடித்தம் செய்யப்படும் வருங்கால வைப்பு நிதி மற்றும் பணியாளர் சிக்கன நாணய கடன்சங்க நிதியை அவரவர் கணக்கில் வரவு வைக்க வேண்டும், அத்தியாவசிய பொருட்கள் அனைத்தையும் சரியான எடையில் தரமான பொருட்களாக பொட்டலமாக வழங்க வேண்டும், கொரோனா தொற்றால் உயிரிழந்த ரேஷன் கடை பணியாளர்களின் குடும்பத்தினருக்கு ரூ.25 லட்சம் நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 11 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று ரேஷன் கடை பணியாளர்கள் தற்செயல் விடுப்பு எடுக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த வகையில் மாவட்டத்தில் சுமார் 100 ரேஷன் கடைகளின் பணியாளர்கள் நேற்று தற்செயல் விடுப்பு எடுத்தனர்.

பின்னர் அவர்கள் தேனி கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் அலுவலகம் முன்பு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதற்கு தமிழ்நாடு அரசு நியாய விலைக்கடை பணியாளர்கள் சங்க மாவட்ட தலைவர் பொன்.அமைதி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சேதுராமன் முன்னிலை வகித்தார். இதில் ஏராளமான நிர்வாகிகள் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com