பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 13 பணிமனைகளில் நடந்தது

தொழிலாளர்கள் மீதான பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் 13 பணிமனைகளில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
பழிவாங்கும் நடவடிக்கையை கைவிட வலியுறுத்தி அரசு போக்குவரத்துக்கழக தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் 13 பணிமனைகளில் நடந்தது
Published on

விழுப்புரம்,

விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழக பணிமனை எண் 1, 2, 3 ஆகிய கிளைகளின் முன்பு நேற்று காலை தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக விழுப்புரம் மண்டல அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பு சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தொ.மு.ச. பொதுச்செயலாளர் பிரபா தண்டபாணி தலைமை தாங்கி கண்டன உரையாற்றினார். தொ.மு.ச. தலைவர் ஞானசேகரன் வரவேற்றார். நிர்வாக பணியாளர் முன்னேற்ற சங்க பொதுச் செயலாளர் வாலிபால் மணி, சி.ஐ.டி.யு. தலைவர் மூர்த்தி, பொதுச்செயலாளர் ரகோத்தமன், ஐ.என்.டி.யு.சி. பொதுச்செயலாளர் முருகானந்தம், மறுமலர்ச்சி தொழிற்சங்க பொதுச்செயலாளர் மனோகரன், அறிவர் அம்பேத்கர் விடுதலை முன்னணி பொதுச் செயலாளர் கணேசன், தொ.மு.ச. துணைத்தலைவர்கள் பெருமாள், சந்திரசேகர், பிரசார செயலாளர் ரவிச்சந்திரன், தலைமை நிலைய செயலாளர் ராதாகிருஷ்ணன், துணை செயலாளர்கள் ராஜேந்திரன், மனோகரன் ஆகியோர் கலந்துகொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.

கொரோனா ஊரடங்கு காலத்தில் 50 சதவீத பஸ்களே இயக்கப்படும் சூழலில் தொழிலாளர்களுக்கு பணிக்கு வந்தாலும் வேலை தராமல் அவர்களுக்கு சிறப்பு விடுப்பும் வழங்காமல் தொழிலாளர்களின் வருகைப்பதிவேட்டில் பல்வேறு குளறுபடிகளை செய்யும் நிர்வாகத்தை கண்டித்தும், போக்குவரத்து ஊழியர்களின் 14-வது ஊதிய உயர்வு பேச்சு வார்த்தையை உடனடியாக தொடங்க வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய ஓய்வூதிய பணப்பலன்களை உடனடியாக வழங்க வேண்டும், சிறப்பு நிதியளித்து போக்குவரத்து கழகத்தினை காத்திட வேண்டும், தொழிலாளர்களை பழிவாங்கும் விதமாக மண்டலம் விட்டு மண்டலம் இடமாற்றம் செய்வது, 12-மணி நேரம் தொலைதூர மாற்றுப் பணிகள் என்று தொழிலாளர் பாதுகாப்பு சட்டங்களுக்கு எதிராக நிர்வாகம் நடந்து கொள்ளும் போக்கை கைவிட வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் பணிமனை செயலாளர்கள், அனைத்து தொழிற்சங்க கூட்டமைப்பின் நிர்வாகிகள், தொழிலாளர்கள் கலந்துகொண்டனர். முடிவில் தொ.மு.ச. அமைப்பு செயலாளர் வேலு நன்றி கூறினார்.

இதேபோல் விழுப்புரம் மண்டலத்துக்கு உட்பட்ட கள்ளக்குறிச்சி பணிமனை எண் 1, 2, உளுந்தூர்பேட்டை, சின்னசேலம், சங்கராபுரம், திருக்கோவிலூர், செஞ்சி, திண்டிவனம், புதுச்சேரி, கோயம்பேடு ஆகிய விழுப்புரம் மண்டலத்திற்குட்பட்ட 10 பணிமனைகளிலும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com