

சேலம்,
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அருகே உள்ள மங்கலப்பேட்டையை சேர்ந்தவர் வெங்கடேசன். மளிகைக்கடை நடத்தி வருகிறார். இவரது மகன் கோவர்த்தனன். இவர், என்ஜினீயரிங் கல்லூரி ஒன்றில் 4-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று காலை வாந்தி மற்றும் தலைச்சுற்றல் ஏற்பட்டு கடலூரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் கோவர்த்தனன் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக சேலம் விம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு ஆஸ்பத்திரியின் முதன்மை செயல் அதிகாரியும் அவசர சிகிச்சை நிபுணருமான டாக்டர் வி.பி.சந்திரசேகர், டாக்டர் ஆனந்த் சாஹர், மூளை மற்றும் நரம்பியல் நிபுணர் டாக்டர் கர்ணன், அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கவுதம் மற்றும் மருத்துவ குழுவினர் பல்வேறு கட்டங்களாக கோவர்த்தனன் உடல்நிலையை பரிசோதனை செய்தனர். அப்போது அவருக்கு, மூளையில் ரத்தநாள அடைப்பினால் மூளை வீக்கம் ஏற்பட்டு மூளைச்சாவு அடைந்தது கண்டறியப்பட்டது. இது குறித்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் மூளைச்சாவு அடைந்த கோவர்த்தனனின் உடல் உறுப்புகளை தானம் செய்ய முன்வந்தனர். அதைத்தொடர்ந்து அவரது இதயம், கல்லீரல், கண் மற்றும் சிறுநீரகம் ஆகிய உறுப்புகள் அறுவை சிகிச்சை மூலம் எடுக்கப்பட்டு, வேறு நபர்களுக்கு பொருத்த டாக்டர்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறார்கள்.
இந்த தகவலை விம்ஸ் மருத்துவமனையின் முதன்மை செயல் அதிகாரி டாக்டர் வி.பி.சந்திரசேகர், மருத்துவ இயக்குனர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.