தஞ்சை சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

தஞ்சை பூக்காரத்தெரு சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. வருகிற 13–ந்தேதி சூரசம்ஹாரம் நடக்கிறது.
தஞ்சை சுப்பிரமணியசுவாமி கோவிலில் கந்தசஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கியது
Published on

தஞ்சாவூர்,


தஞ்சை பூக்காரத்தெருவில் சுப்பிரமணியசுவாமி கோவில் உள்ளது. இந்த கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் கந்தசஷ்டி விழா சிறப்பாக கொண்டாடப்படும். அதன்படி இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதையொட்டி நேற்று முன்தினம் விக்னேஸ்வர பூஜை நடைபெற்றது. நேற்று மதியம் 12 மணிக்கு கொடியேற்றம் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அதைத்தொடர்ந்து இரவு 7 மணி அளவில் அன்னவாகனத்தில் சாமி புறப்பாடு நடைபெற்றது.


இன்று (வெள்ளிக்கிழமை) மான் வாகனத்தில் புறப்பாடும், நாளை (சனிக்கிழமை) பூத வாகனத்தில் புறப்பாடும், 11ந் தேதி யானை வாகனத்தில் புறப்பாடும், 12ந் தேதி ரிஷப வாகனத்தில் பஞ்சமூர்த்திகள் எழுந்தருளல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. கந்தசஷ்டி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் வருகிற 13ந்தேதி இரவு 7 மணிக்கு நடைபெறுகிறது.

14ந்தேதி பகல் 11 மணிக்கு திருக்கல்யாண உற்சவமும், இரவு 7 மணிக்கு முத்துப்பல்லக்கு வீதி உலாவும் நடைபெறுகிறது. 15ந்தேதி சாமி குதிரை வாகனத்தில் புறப்பாடும், 16ந்தேதி தேரோட்டமும் நடைபெறுகிறது. 18ந்தேதி விடையாற்றி விழா நடைபெறுகிறது.

விழாவையொட்டி கோவிலில் முருகன், வள்ளிதெய்வாணைக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் செயல் அலுவலர் சீனிவாசன், ஆய்வாளர் செந்தில்குமார் மற்றும் கோவில் பணியாளர்கள், மண்டகப்படியினர் செய்து வருகிறார்கள்

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com