

அம்பாசமுத்திரம்,
ஆழ்வார்குறிச்சி அருகே உள்ள கீழாம்பூர் பெரிய தெருவை சேர்ந்தவர் முருகன். இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இவர் அம்பாசமுத்திரம் அருகே உள்ள கோவில்குளத்தை சேர்ந்தவர். இந்த தம்பதிக்கு அமர்நாத், சீனிவாசன் என்ற 2 மகன்களும், மகேசுவரி என்ற மகளும் உள்ளனர். அமர்நாத் அம்பாசமுத்திரத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் 7ம் வகுப்பும், சீனிவாசன் 6ம் வகுப்பும், மகேசுவரி 5ம் வகுப்பும் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் கணவன்மனைவி இருவரும் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்கிறார்கள். பிள்ளைகள் தந்தை முருகனுடன் வசித்து வருகிறார்கள்.
நீதிபதியிடம் மனு
நேற்று அமர்நாத், சீனிவாசன், மகேசுவரி ஆகிய 3 பேரும் பள்ளி செல்வதற்காக கீழாம்பூர் பஸ் நிறுத்தத்தில் நின்றபோது அங்கு வந்த ஜெயலட்சுமியின் சகோதரர்கள் அவர்களை அம்பாசமுத்திரம் பள்ளிக்கு படிக்க செல்லக்கூடாது என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதையடுத்து 3 பேரையும் அவர்களது தந்தை முருகன் அம்பை கோர்ட்டுக்கு பள்ளிச்சீருடையிலேயே அழைத்து வந்தார்.
அங்கு 3 பேரும் பாதுகாப்பு கோரி நீதிபதி முரளிதரனிடம் மனு கொடுத்தனர். மனுவை பெற்றுக் கொண்ட நீதிபதி, பிள்ளைகளை முதலில் பள்ளியில் கொண்டு விட்டு வரும்படி முருகனிடம் அறிவுறுத்தினார். தொடர்ந்து இதுகுறித்து விசாரணை நடத்தி உடனடியாக அறிக்கை தாக்கல் செய்யுமாறு ஆழ்வார்குறிச்சி போலீசாருக்கு உத்தரவிட்டார்.
பள்ளிச்சீருடையில் சிறுவர்கள் கோர்ட்டுக்கு வந்து பாதுகாப்பு கோரி நீதிபதியிடம் மனு கொடுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.