

அன்னூர்,
கோவை மாவட்டம், அன்னூர் அருகே உள்ள உப்புத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் கங்காதரன் (வயது 53). இவருடைய மகன் புவனகங்கேசுவரன் (21). இவர் மேற்கு இந்திய தீவு கூட்டத்தில் உள்ள செயின்ட் லூசி தீவில் இபார்ட்டன் பல்கலைக்கழகத்தில் மருத்துவ படிப்பு 3-ம் ஆண்டு படித்து வந்தார். அந்த பல்கலைக்கழகத்தில் இந்தியாவை சேர்ந்த பலரும் மருத்துவ படிப்பு படித்து வருகிறார்கள். இந்த நிலையில் நேற்று ஆசிரியர் மற்றும் மாணவர்கள் அங்குள்ள கடற்கரைக்கு சென்றனர். பாறை அருகே புகைப்படம் எடுத்துக்கொண்டு இருந்தனர். அப்போது வேகமாக வந்த கடல் அலை பலரை இழுத்துச்சென்றது.
இதில் அன்னூர் மருத்துவ மாணவர் புவனகங்கேசுவரன், பெங்களூருவை சேர்ந்த மாணவி இந்துமதி(19), சேலத்தை சேர்ந்த ஆசிரியர் பூபதி (37) ஆகிய 3 பேரும் கடலில் மூழ்கி பரிதாபமாக இறந்தனர். புவனகங்கேசுவரன், இந்துமதி ஆகியோரின் உடல்கள் மீட்கப்பட்டன. ஆசிரியர் பூபதியின் உடலை தேடி வருகிறார்கள். கடலில் மூழ்கி 3 பேர் இறந்தது குறித்து, செயின்ட் லூசி தீவு போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். உடல்களை விரைந்து சொந்தஊருக்கு கொண்டு வர மத்திய அரசு தங்களுக்கு உதவ வேண்டும் என்று பெற்றோர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.