துக்க நாளில் அரசு நிகழ்ச்சி: சிவக்குமார சுவாமிக்கு அவமரியாதைய ஏற்படுத்தவில்லை மந்திரி பிரியங்க் கார்கே பேட்டி

துக்க நாளில் அரசு நிகழ்ச்சியை நடத்திய விஷயத்தில், சிவக்குமார சுவாமிக்கு அவமரியாதையை ஏற்படுத்தவில்லை என்று மந்திரி பிரியங்க் கார்கே கூறினார்.
துக்க நாளில் அரசு நிகழ்ச்சி: சிவக்குமார சுவாமிக்கு அவமரியாதைய ஏற்படுத்தவில்லை மந்திரி பிரியங்க் கார்கே பேட்டி
Published on

பெங்களூரு,

துமகூரு சித்தகங்கா மடாதிபதி சிவக்குமார சுவாமி நேற்று முன்தினம் மரணம் அடைந்தார். இதையொட்டி கர்நாடகத்தில் 3 நாட்கள் துக்கம் அனுசரிக்கப்படும் என்று கர்நாடக அரசு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் சமூக நலத்துறை சார்பில் அரசியலமைப்பு கலந்துரையாடல் நிகழ்ச்சி பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் துணை ஜனாதிபதி ஹமீது அன்சாரி கலந்து கொண்டு பேசினார்.

மாநிலத்தில் துக்கம் அனுசரிக்கும்போது, இந்த நிகழ்ச்சி நடத்துவது சரியல்ல என்று கூறி கன்னட அமைப்பினர் பெங்களூருவில் போராட்டம் நடத்தினர். இதையடுத்து அந்த நிகழ்ச்சி பாதியிலேய ரத்து செய்யப்பட்டது.

துக்க தினத்தில் இந்த நிகழ்ச்சி மூலம் சிவக்குமார சுவாமியை கூட்டணி அரசு குறிப்பாக காங்கிரஸ் கட்சி அவமதித்துவிட்டது என்று பா.ஜனதா குறை கூறியுள்ளது.

இதுகுறித்து சமூக நலத்துறை மந்திரி பிரியங்க் கார்கே நிருபர்களிடம் கூறுகையில், செய்யும் தொழிலே தெய்வம் என்று சிவக்குமார சுவாமி சொன்னார். அதன்படி அவர் வாழ்ந்து காட்டி சென்றுள்ளார். இந்த நிகழ்ச்சியின் தொடக்கத்தில் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்தோம். சிவக்குமார சுவாமிக்கு நாங்கள் அவமரியாதையை ஏற்படுத்தவில்லை.

யாருடைய பிறந்த நாளுக்கும் அரசு விடுமுறை வேண்டாம் என்பது எனது கருத்து. யாரையும் அவமதிக்க வேண்டும் என்பது எனது நோக்கம் அல்ல. எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து நிகழ்ச்சியை பாதியிலேயே ரத்து செய்துவிட்டோம் என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com