இந்த தாக்குதல் சம்பவத்தில் பேருந்தின் சக்கரம் பழுதடைந்தது ஒரு காரணம் என கூறப்படுகிறது.
ஸ்ரீநகரில் இருந்து 60 பக்தர்களுடன் நேற்று மாலை 5 மணியளவில் பேருந்து புறப்பட்டது. இரவு 7 மணிக்குள் 100 கி.மீட்டர் தொலைவை அடைந்து விடலாம் என கருதப்பட்டது.
எனினும், தலைநகர் ஸ்ரீநகரில் இருந்து 50 கி.மீட்டர் தொலைவில் சங்கம் என்ற பகுதியில் பேருந்தின் சக்கரம் ஒன்று பஞ்சர் ஆனது ஓட்டுநரால் கண்டறியப்பட்டது.
இதனை அடுத்து சாலையில் பேருந்து நிறுத்தப்பட்டு வேறு சக்கரம் பொருத்தப்பட்டது. இதனால் பேருந்தின் பயணம் ஒரு மணி நேரம் தாமதம் அடைந்தது. இரவு 7 மணிக்கு மேல் தேசிய நெடுஞ்சாலையில் பயணம் செய்தது பாதுகாப்பிற்கான ஆபத்தினை அதிகப்படுத்தியுள்ளது.
அமர்நாத் யாத்திரைக்காக காலை 4 மணியில் இருந்து இரவு 7 மணி வரை தேசிய நெடுஞ்சாலையில் பாதுகாப்பு படையினர் தங்களது பணியில் ஈடுபடுவர். ஜம்மு மற்றும் காஷ்மீரில் இருந்து பக்தர்களை ஏற்றி கொண்டு வாகனங்கள் செல்வதற்கு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையிலேயே கானாபல் பகுதியில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 தீவிரவாத குழுக்கள் பேருந்தின் மீது துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
கடந்த 2000ம் ஆண்டு ஆகஸ்டில் பாதுகாப்பு படை மற்றும் லஸ்கர் இ தொய்பா தீவிரவாதிகள் இடையே நடந்த துப்பாக்கி சண்டையில் 30 அமர்நாத் பக்தர்கள் கொல்லப்பட்டனர்.