மணிப்பூர் என்கவுன்டர்: 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இம்பால்,
மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி இனக்குழுக்களுக்கு இடையே 2023 முதல் மோதல் நடைபெற்று வருகிறது. இதில் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
அதேவேளை, இந்த இனக்குழுக்களை சேர்ந்த ஆயுதக்குழுவினரை மத்திய அரசு பயங்கரவாத இயக்கங்களாக அறிவித்துள்ளது. மேலும், இந்த பயங்கரவாத இயக்கங்களை ஒழிக்க பாதுகாப்புப்படையினர் மணிப்பூரில் நிலைநிறுத்தப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், அம்மாநிலத்தின் கம்ஜொங் மாவட்டம் ஹனிப் கிராமத்தில் உள்ள வனப்பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்புப்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் அடிப்படையில் இன்று அதிகாலை அப்பகுதியில் பாதுகாப்புப்படையினர் தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது அங்கு பதுங்கி இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர்.
இந்த துப்பாக்கி சூட்டிற்கு பாதுகாப்புப்படையினரும் பதிலடி தாக்குதல் நடத்தினர். இதில், பாதுகாப்புப்படையினர் நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். எஞ்சிய பயங்கரவாதிகள் வனப்பகுதிக்குள் தப்பிச்சென்றுவிட்டனர். இதையடுத்து என்கவுன்டர் நடந்த பகுதியில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டு தொடர்ந்து தேடுதல் வேட்டை நடைபெற்று வருகிறது.






