

புது டெல்லி,
இரண்டு நாட்கள் மலேசிய பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நாடு திரும்பினார் .
பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக மலேசியா சென்றார். மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிமின் அழைப்பை ஏற்று இரண்டு நாள் அரசு முறைப் பயணமாக பிரதமர் மோடி மூன்றாவது முறையாக மலேசியா சென்றிருந்தார்.
இதில் 2024 ஆகஸ்டில் இரு நாடுகளுக்கும் இடையே ஏற்படுத்தப்பட்ட "விரிவான மூலோபாயக் கூட்டாண்மை" (Comprehensive Strategic Partnership) நிலையை மேலும் வலுப்படுத்துவது குறித்து இரு தலைவர்களும் விரிவான பேச்சுவார்த்தைகளை நடத்தினர்.
மேலும், பாதுகாப்பு, செமிகண்டக்டர் (Semiconductors), வர்த்தகம், டிஜிட்டல் தொழில்நுட்பம் மற்றும் பேரிடர் மேலாண்மை உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்த 11 முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.
கோலாலம்பூரில் இந்திய வம்சாவளியினர் மத்தியில் உரையாற்றிய பிரதமர், "தமிழ் மொழி உலகிற்கே இந்தியா அளித்த மாபெரும் பரிசு" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார். மலேசியாவில் இந்தியாவின் புதிய தூதரக அலுவலகம் (Consulate) திறக்கப்படும் என்றும், இந்திய மாணவர்கள் பயன்பெற "திருவள்ளுவர் கல்வி உதவித்தொகை" (Thiruvalluvar Scholarship) வழங்கப்படும் என்றும் மோடி அறிவித்தார்.