

மும்பை,
மராட்டிய மாநில துணை முதல் மந்திரியாக இருந்து வந்தவரும், தேசியவாத காங்கிரஸ் தலைவருமான அஜித் பவார் கடந்த 28-ந் தேதி விமான விபத்தில் பலியானார். இதைத்தொடர்ந்து, பா.ஜ.க.-சிவசேனா கூட்டணியில் தேசியவாத காங்கிரஸை தக்க வைத்துக் கொள்ளும் முயற்சியாக, அஜித் பவார் மனைவி சுனேத்ரா பவாருக்கு துணை முதல் மந்திரி பதவி வழங்க முடிவு செய்யப்பட்டது. சுனேத்ரா பவார் இன்று மாலை 5 மணிக்கு துணை முதல் மந்திரியாக பதவியேற்றார். அவருக்கு கலால் மற்றும் விளையாட்டுத் துறை ஒதுக்கப்பட வாய்ப்பு உள்ளதாக தேசியவாத காங்கிரஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
மராட்டிய பட்ஜெட் கூட்டத்தொடர் மார்ச்சில் நடைபெற உள்ளதால், நிதித் துறையை தற்காலிகமாக முதல்வர் பட்னாவிஸ் தனது கட்டுப்பாட்டில் வைத்திருப்பார். பின்னர் அது தேசியவாத காங்கிரஸிடம் ஒப்படைக்கப்படும் என்று கூறப்படுகிறது.மராட்டிய துணை முதல்வராக பதவி ஏற்ற முதல் பெண் என்ற பெருமையை சுனேத்ரா பவார் பெற்றுள்ளார். முன்னதாக, துணை முதல் மந்திரி பதவி ஏற்பதற்காக அவர் இன்று காலை மும்பை சென்றடைந்தார். அவருடன் அவரது மகன் பரத் வந்தார்.தேசியவாத காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் சுனேத்ரா பவார் சட்டசபை கட்சித் தலைவராக தேர்ந்தெடுக்கப்படார்.
62 வயதான சுனேத்ரா பவார் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் பாராமதி தொகுதியில் சுப்ரியா சுலேவிடம் தோற்றார். இதனைத் தொடர்ந்து அவர் மேல்சபை எம்.பி. ஆனார். தற்போது துணை முதல்வராகிறார். பாராமதி பகுதியை உயர் தொழில்நுட்ப ஜவுளி பூங்காவாக மாற்றியதில் சுனேத்ராவுக்கு பங்கு உண்டு. சுனேத்ரா பவார் துணை முதல்வராக ஆவதால், அவரது மேல்சபை எம்.பி. பதவியை அவரது மகன் பரத் பெறுகிறார்.