

திஸ்பூர்,
அசாமின் ரைபிள்ஸ் படை பிரிவினர், சி.ஆர்.பி.எப். மற்றும் மணிப்பூர் போலீசார் இணைந்து, மணிப்பூரில் காங்போக்பி மாவட்டத்தில் செஷாங் பகுதியில் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர்.
அந்த பகுதியில் சந்தேகத்திற்குரிய வகையிலான பயிர்கள் பயிரிடப்பட்டு உள்ளன என்று கிடைத்த உளவு தகவல் அடிப்படையில் அவர்கள் மேற்கொண்ட சோதனையின்போது, பல கோடி மதிப்பிலான சட்டவிரோத அபினி செடிகள் 22 ஏக்கர் பரப்பில் பயிரிடப்பட்டு இருந்தது தெரிய வந்தது.
உடனடியாக அப்பகுதியை தங்களுடைய கட்டுக்குள் கொண்டு வந்து, போலீசார் அவற்றை அழித்தனர். இவற்றில் இருந்து 160 கிலோ எடை கொண்ட ஓபியம் தயாரிக்க முடியும். அவற்றின் மதிப்பு பல கோடி மதிப்பிருக்கும் என கூறப்படுகிறது.
இவற்றை அழித்தது, போதை பொருள் கும்பலுக்கு பெரிய இழப்பாக இருக்கும் என அசாமின் ரைபிள்ஸ் படை பிரிவின் ஐ.ஜி. தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதுதவிர, அவற்றை பதுக்கி வைக்க உதவியாக அப்பகுதியில் இருந்த 3 குடிசைகளும் அழிக்கப்பட்டன. இதுபோக அந்த வழியே சென்ற வாகனம் ஒன்றை மடக்கி விசாரித்ததில் ரூ.2.9 கோடி மதிப்பிலான சிகரெட் பண்டில்களும் கைப்பற்றப்பட்டு, சட்ட விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டன.