

எர்ணாகுளம்,
கேரளாவின் கண்ணூர் மாவட்டத்தில் செருபுழா பகுதியை சேர்ந்த அம்பத்து இலியாஸ் (வயது 62). 40 வருடங்களாக விவசாய பணியில் ஈடுபட்டு வந்த அவர், விவசாயத்திற்காக பல்வேறு விருதுகளை பெற்றுள்ளார்.
இந்நிலையில், அவருடைய பண்ணை நிலத்தில் விவசாயி இலியாஸ், பயிர்களுக்கு தெளிக்கும் பூச்சிக்கொல்லி மருந்து குடித்து மயங்கிய நிலையில் கிடந்திருக்கிறார். அந்த வழியே சென்றவர்கள் பார்த்து, அவரை மீட்டு சிகிச்சைக்கு கொண்டு சென்றனர்.
ஆனால், அதில் பலனின்றி அவர் இன்று உயிரிழந்து விட்டார். அவர் நிலம் குத்தகைக்கு எடுத்தும், சொந்த நிலத்திலும் பயிரிட்டு வந்திருக்கிறார். கண்ணூர் மற்றும் அருகேயுள்ள காசர்கோட்டிலும் பல்வேறு வகையான காய்கறிகள், தோட்டங்களை அமைத்திருக்கிறார்.
எனினும், கடந்த சில ஆண்டுகளாக விளைச்சல் பற்றாக்குறையால் போதிய விலை கிடைக்காமல் நிதி நெருக்கடியில் சிக்கி தவித்து வந்துள்ளார். இதில், லட்சக்கணக்கில் பண நஷ்டம் ஏற்பட்டிருக்கிறது என உறவினரான ஷின்டோ கூறியுள்ளார். கேரளாவில், விவசாயத்திற்காக பல விருதுகளை பெற்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.