

புதுடெல்லி,
டெல்லியில் மரக்கன்றுகளை நடும் நிகழ்ச்சியில் வேளாண் மற்றும் விவசாயிகள் நலனுக்கான மத்திய மந்திரி சிவராஜ் சிங் சவுகான் இன்று கலந்து கொண்டார். அப்போது அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, உலகின் பெரும் அச்சுறுத்தலாக பருவநிலை மாற்றம் உள்ளது என பேசினார்.
அவர் தொடர்ந்து பேசும்போது, அதற்கு தீர்வு காண்பதற்காக அரசு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எனினும், வருங்கால தலைமுறைக்காக இந்த பூமியை பாதுகாப்பதில் சமூகத்திற்கும் பொறுப்பு உள்ளது என பேசியுள்ளார்.
பருவநிலை மாற்றத்திற்கு எதிராக போராட இந்தியா நிதியுதவியை பெருமளவில் அதிகரித்து உள்ளது. கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு, இந்த நிதியானது, ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3.7 சதவீதம் என்ற அளவில் இருந்தது. ஆனால், தற்போது அது 5.6 சதவீதம் என்ற அளவுக்கு அதிகரிக்கப்பட்டு உள்ளது.
பிரதமர் மோடியும் இதற்காக பல்வேறு திட்டங்களை துவக்கி வைத்துள்ளார். இயற்கை வளங்களை பாதுகாக்க மிஷன் மவுசம், மிஷன் லைப், அம்ரித் சரோவர் உள்ளிட்டவை அதில் அடங்கும்.