

புதுடெல்லி,
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பியாவில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று நடந்த துப்பாக்கி சூட்டில் 9 பேர் கொல்லப்பட்டுள்ளனர். சுமார் 20-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்தியவரும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் இந்த சம்பவத்துக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
கனடாவில் நடந்த கொடூரமான துப்பாக்கி சூடு சம்பவத்தால் ஆழ்ந்த அதிர்ச்சியடைந்தேன். தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களுக்கு எனது மனமார்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். இந்த ஆழ்ந்த துயரமான தருணத்தில் கனடா மக்களுடன் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.