

புதுடெல்லி,
டெல்லியில் தகுதி வாய்ந்த ரேசன் அட்டைதாரர்களுக்கு ஹோலி மற்றும் தீபாவளி பண்டிகை காலங்களில் இலவச கியாஸ் சிலிண்டர் ஒன்றை அரசு வழங்கும் என முதல்-மந்திரி ரேகா குப்தா அறிவித்து உள்ளார்.
டெல்லி சட்டசபை தேர்தலின்போது பா.ஜ.க. அறிவித்த தேர்தல் வாக்குறுதிகளில் இதுவும் ஒன்றாகும். இதனை பா.ஜ.க. நிறைவேற்றி உள்ளது.
இதற்காக டெல்லியில் மந்திரிகள் அடங்கிய கூட்டம் ஒன்று நேற்று நடந்தது. அதில் இந்த முடிவு எடுக்கப்பட்டது. இதன்படி, ஒரு கியாஸ் சிலிண்டர் விலையான ரூ.853 தகுதி வாய்ந்த ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும்.
இதேபோன்று குழாய் வழியாக இயற்கை எரிவாயு இணைப்பு கொண்டவர்களுக்கும் இந்த பலன் கிடைக்கும். இதற்காக, ரூ.242 கோடியை ஒதுக்க டெல்லி அரசு ஒப்புதல் அளித்து உள்ளது. டெல்லியில் ஒரு கியாஸ் சிலிண்டர் விலை ரூ.853 ஆக உள்ளது.