

புதுடெல்லி,
நாட்டின் தலைநகர் டெல்லியில் புதிய வகை கலாசாரம் பரவி வருகிறது. சிறுவர்கள், இளைஞர்கள் ஆயுதங்களுடன் இருப்பது, அவதூறாக பேசுவது போன்றவற்றை புகைப்படங்களாக எடுத்தும், வீடியோ எடுத்தும் அவற்றை சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
சமூகத்தில் மக்களிடையே அச்ச உணர்வை உருவாக்கும் மற்றும் மிரட்டும் வகையிலான இந்த செயலை அடுத்து டெல்லி போலீசார் ஆபரேசன் சாஸ்திரா என்ற நடவடிக்கையை எடுத்து வருகின்றனர்.
இதுபற்றி போலீஸ் இணை கமிஷனர் எஸ்.கே. ஜெயின் கூறும்போது, ஆன்லைன் வழியேயான அச்சுறுத்தல்களை கட்டுப்படுத்த மற்றும் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில் இந்த ஆபரேசன் சாஸ்திரா நடவடிக்கை எடுக்கப்பட்டது என்றார்.
இதில், 2 ஆயிரம் போலீசார் அடங்கிய 500-க்கும் மேற்பட்ட குழுக்கள் தீவிர விசாரணையில் இறங்கின. ஏறக்குறைய 6 ஆயிரம் பேரின் சமூக ஊடக கணக்குகளை பற்றி புலனாய்வு விசாரணை மேற்கொண்டனர்.
இதன் தொடர்ச்சியாக, 16 சிறுவர்கள், 67 பெரியவர்கள் என மொத்தம் 83 பேரை கைது செய்தனர். இதுதொடர்பாக 61 எப்.ஐ.ஆர்.கள் பதிவு செய்யப்பட்ட்ன. 82 ஆயுதங்கள் மற்றும் 93 துப்பாக்கி தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. இதுதொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.