

புதுடெல்லி,
இந்தியாவில் ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் பல்வேறு வரிகள் அமலில் இருந்தன. ஆனால், வருமான வரி என்பது எப்போது கொண்டுவரப்பட்டது என்பது நிறைய பேருக்கு தெரியாது.
நாடு 1947-ம் ஆண்டு சுதந்திரம் அடைந்து, புதிய அரசியல் சட்டங்கள் வடிவமைக்கப்பட்ட பிறகே வருமான வரி விதிப்பு முறை அமலுக்கு வந்திருக்கலாம் என பலர் நினைக்கலாம். ஆனால், அதுவும் இல்லை.
இந்தியாவில் வருமான வரி விதிப்பு முறை ஆங்கிலேயர் ஆட்சி காலத்தில் 1860-ம் ஆண்டு கொண்டுவரப்பட்டது. இந்தியாவில் 1857-ம் ஆண்டு விடுதலைப்போர் தலைதூக்கிய நேரத்தில், ஆங்கிலேய அரசு கடும் நிதி நெருக்கடியை சந்தித்தது. அதை சமாளிக்க, பிரித்தானிய கவர்னராக இருந்த ஜேம்ஸ் வில்சன் என்பவர் 1860-ம் ஆண்டு வருமான வரியை அறிமுகப்படுத்தினார்.
நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, 1961-ம் ஆண்டு இந்திய வருமான வரிச் சட்டம் நிறைவேற்றப்பட்டது. காலப்போக்கில் பல்வேறு மாற்றங்களையும் பெற்று வருகிறது. கடைசியாக, கடந்த (2025-26) நிதியாண்டில் வருமான வரியில் மாற்றம் கொண்டுவரப்பட்டது.
அதன்படி, வருமானத்தில் முதல் ரூ.4 லட்சத்திற்கு வரி கிடையாது. ரூ.4 லட்சம் முதல் ரூ.8 லட்சம் வரையிலான வருமானத்துக்கு 5 சதவீதம் வரியும், ரூ.8 லட்சம் முதல் ரூ.12 லட்சம் வரை 10 சதவீதம் வரியும், ரூ.12 லட்சம் முதல் ரூ.16 லட்சம் வரை 15 சதவீதம் வரியும், ரூ.16 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை 20 சதவீதம் வரியும், ரூ.20 லட்சம் முதல் ரூ.24 லட்சம் வரை 25 சதவீதம் வரியும், ரூ.24 லட்சத்திற்கு மேல் 30 சதவீத வரியும் கட்ட வேண்டும். இந்த வருமான வரி விதிப்பு நடைமுறை வரும் ஏப்ரல் மாதம் 1-ந் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது.