

காந்திநகர்,
குஜராத்தின் ஆமதாபாத் நகரில் உள்ள பல்வேறு பள்ளிகளுக்கு இன்று இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. அதில், இந்தியாவை காலிஸ்தானாக மாற்றுவோம் என அச்சுறுத்தல் விடும் வகையில் வாசகம் இடம் பெற்றிருந்தது. இதனால், மாணவர்கள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பில் அச்சம் ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து ஆமதாபாத்தில் உள்ள அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் போலீசார் ஒருங்கிணைந்து செயல்பட்டு, பாதுகாப்பு நடவடிக்கைகள், முன்னெச்சரிக்கையாக சோதனைகள் மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
டெல்லியிலும் கடந்த வாரம் இதேபோன்று 9 பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்டது. இ-மெயில் மூலம் விடப்பட்ட அச்சுறுத்தல் செய்தியில், டெல்லி காலிஸ்தானாக மாறும் என எச்சரிக்கப்பட்டு இருந்தது. இதனால், காலிஸ்தான் ஆதரவு அமைப்பினரால் இந்த இ-மெயில்கள் அனுப்பப்பட்டு இருக்கும் என கூறப்படுகிறது.
தொடர்ந்து உஷாராக இருக்கும்படியும், சந்தேகத்திற்குரிய விசயம் எதுவாக இருப்பினும் உடனடியாக தொடர்பு கொள்ளும்படியும் அதிகாரிகள் வலியுறுத்தி உள்ளனர். இதனையடுத்து, டெல்லி மற்றும் குஜராத்தில் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடப்பட்ட நபர்கள் தொடர்பான விசாரணை நடந்து வருகிறது.